ஸ்டாலினும், பினராயி விஜயனும் யார் சிறந்த முதல்வர் என்று போட்டி போடுகிறார்கள்: சத்யராஜ் பேச்சு
சென்னை: 'இது கலைஞர் சுயசரிதையா அல்லது முக ஸ்டாலின் சுயசரிதையான்னு யோசிக்கணும்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சுயசரிதை உங்களின் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் கலகலப்பாக பேசினார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துறை வழங்கி வருகின்றனர்.
சத்யராஜ்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட்டதும், நடிகர் சத்யராஜ் வாழ்த்துரை வழங்கினார். அப்போது, ''பேரறிஞர் அண்ணா திமுக-வினரை தம்பி என்றுதான் அழைப்பார்; அதைப் பின்பற்றி நானும் அழைக்கிறேன் தம்பி ராகுல் அவர்களே..'' என்று பேசிவிட்டு ராகுல் காந்திக்காக சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினார். மேலும், நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கான குரலாக ஒலித்ததற்கு ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்.
தோழர் பினராயி
அண்ணன் என முதல்வரையும், தம்பி என ராகுல் காந்தியையும் அழைத்த சத்யராஜ், கேரள முதல்வர் பினராயி என்பதை விட, தோழர் பினராயி என்றே அழைக்கலாம் என்று தோழர் என்று அழைத்து வரவேற்றார். தேஜஸ்வி யாதவ் கிரிக்கெட் வீரர், அடுத்த தேர்தலில் சிக்ஸூம் போரும் அடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.சத்யராஜ் பேசுகையில், ''உங்களின் ஒருவன் புத்தகத்தைப் படித்துவிட்டு தான் வந்துள்ளேன். பக்கத்துக்கு பக்கம் கலைஞர் குறித்து தான் உள்ளது. இது முதல்வர் ஸ்டாலின் சுயசரிதையா அல்லது கலைஞர் சுயசரிதையா என்று யோசிக்கும் அளவுக்கு கலைஞர் குறித்து செய்திகள் இருந்தன.
முக ஸ்டாலின்
தமிழக முதல்வரும் கேரள முதல்வரும் யார் சிறந்த முதல்வர் என்று போட்டி போட்டு வேலை செய்து வருகிறார்கள். ரஷ்ய தலைவர் ஸ்டாலினும் இரும்பு மனிதர், முதல்வர் ஸ்டாலினும் இரும்பு மனிதர். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். இதை கட்டிக்காத்து வருகிறார் ஸ்டாலின். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொன்ன போது எதிரே எனக்கு தலைவர் தெரிந்ததாக சொன்னது நெகிழ்ச்சியான ஒன்று. அதை அனுபவித்தவர்களால் தான் அதை உணர்ந்து இப்படி சொல்ல முடியும்.
கலைஞர்
முதல்வர் ஸ்டாலினின் தந்தை கடைசி வரை ஒரு தலைவராகவே வாழ்ந்தவர் கருணாநிதியின் பராசக்தி கதாபாத்திரமான குணசேகரன்கள் ஊருக்கு ஊர் உள்ளனர். ஸ்டாலின் பிறந்தபோது கலைஞர் சிறையில் இருந்தார். மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் மிசா அனுபவம் குறித்து மட்டுமே சினிமா எடுக்கலாம். ஸ்டாலினின் முரசே முழங்கு நாடகத்தை எம்ஜிஆர் தரையில் அமர்ந்து பார்த்தார்.
வாழ்த்து
நானும் எம்.ஜி.ஆர் ரசிகன், முதல்வர் ஸ்டாலினும் எம்.ஜி.ஆர் ரசிகன். இந்த ரசிகன் அந்த ரசிகனின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். 2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்த மேடை வெற்றி பெறட்டும். அதற்கு என் வாழ்த்துகள்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார் நடிகர் சத்யராஜ்.