உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?
சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்ப புள்ளிதான் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் ஏற்கனேவே தொடங்கி விட்டது. செப்.22-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தின் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-அ.தி.மு.க இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க இதில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலை போல் இதிலும் வெற்றி வாகை சூட ஆயத்தமாக இருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கம்
இது தவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்த நிலையில் ஆச்சரியப்படும் விதமாக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சுயேட்சையாக போட்டி
விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் உலா வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலம் வற்புறுத்தி வந்தனர். ஒரு வழியாக அரசியலுக்கு வருவதாக தலையாட்டிய ரஜினிகாந்த், இறுதியில் அரசியலே வேண்டாம் என்று தெளிவாக அறிவித்து விட்டார்.

படங்கள் மூலம் அரசியல்
ரஜினிகாந்த் ரசிகர்களை போல, நடிகர் விஜய்யின் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று இழுத்து வருகின்றனர். நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. விஜய் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும், தனது படங்கள் மூலம் அரசியல் பேசி வருகிறார்.

அரசியலின் ஆரம்ப புள்ளி
தலைவா படம் தொடங்கி மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்கள் அரசியலை பேசுவதுபோல் இருந்ததால் சர்ச்சையானது. இந்த நிலையில் நடிகர் விஜயின் முழு சம்மதத்தின் பேரில் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அதற்கு முன்னோட்டமாக அரசியலில் ஆழம் பார்ப்பதற்காகத்தான் மக்கள் இயக்கத்தை உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். இது விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்ப புள்ளிதான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications