பறந்த வாட்ஸ்அப் மெசேஜ்..காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நிரந்தர நீக்கம்! போன வாரமே போயிட்டாங்களே!
சென்னை : நடிகையும் பாஜகவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அதிரடியாக அறிவித்திருக்கிறது.
தமிழக பாஜகவின் அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போனவர் நடிகை காயத்ரி ரகுராம். நடிகையாகவும் நடன இயக்குனராகவும் தமிழ் துறையில் நன்கு அறியப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட அவர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

காயத்ரி ரகுராம்
அதிரடி பேச்சுகள் மூலம் விரைவில் அரசியலிலும் பிரபலமாகத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடும் சர்ச்சைக்கு ஆளான அவர் சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மறு பிரவேசம் செய்தது போல மீண்டும் தீவிர அரசியலில் காலடி வைத்தவர் சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராம் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து அமைதி காத்து வந்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டார். இதனால் மீண்டும் பாஜகவி முன்னணி தலைவராக வலம் வர தொடங்கினார்.

டெய்சி சரண் - சூர்யா சிவா
இந்நிலையில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நிரந்த நீக்கம்
இந்நிலையில் கடந்த வாரம் கடந்த வாரம் காயத்ரி ரகுராம் தமிழக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில் " நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அதிரடியாக அறிவித்திருக்கிறது.

வாட்ச் அப் மெசேஜ்
இது தொடர்பாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் J.லோகநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,"6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள், தனது சுய விருப்பத்தின் பெயரில் விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். கட்சியிலிருந்து அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் "நான் ராஜினாமா செய்கிறேன்" என்று செய்தியும் அனுப்பி இருந்தார்.

எதிர்கால முயற்சி
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் ஒப்புதலின்படி திருமதி.காயத்ரி ரகுராம் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications