ஆதம்பாக்கம் சத்யாவுக்கு வேறொருவருடன் முடிந்த நிச்சயதார்த்தம்?.. ஜீரணிக்காத சதீஷ்.. நடந்தது கொலை
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞரால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் நிச்சயத்தார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்து சதீஷ் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
ஒரு தலைக்காதல், காதல் தோல்வியால் அண்மைக்காலமாக பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது, கட்டாய திருமணம் செய்வது, அந்தரங்க புகைப்படங்களை வைத்து பெண்ணை மிரட்டுவது, கடத்தி பலாத்காரம் செய்வது என பதைபதைக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்வாதி என்ற மென்பொருள் பொறியாளர் தனது பணியிடத்திற்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்திருந்த போது அந்த பெண்ணை காதலித்தாக கூறப்படும் ராம்குமார் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டி கொன்றார். பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸார் சுற்றி வளைத்த போதே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து புழல் சிறையில் அடைந்தனர்.

மின்சார வயர்
அங்கு மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஸ்வாதி மீதான ஒரு தலை காதலால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அது போல் கடந்த ஆண்டு குரோம்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுவேதா என்ற கல்லூரி மாணவி தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது நுழைவு வாயில் அருகே அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் அந்த மாணவியை திடீரென வழிமறித்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதற்கும் ஒரு தலை காதல் என்று சொல்லப்பட்டது.

ஆதம்பாக்கம்
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணிக்கம்- வரலட்சுமி தம்பதியின் மகள் சத்யா. இவர் திநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23) என்பவரும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் சதீஷுடன் சத்யா பழகுவதை நிறுத்திவிட்டாராம்.

சத்யாவுக்கு சதீஷ் தொல்லை
இதனால் தொடர்ந்து சத்யாவை சந்தித்து தன்னிடம் பேசும்போது சதீஷ் வற்புறுத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் சத்யாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த சதீஷ், ரயில்நிலையத்திற்கு வந்த சத்யாவை வழிமறித்து பேச்சு கொடுத்துள்ளார். தன்னை காதலித்துவிட்டு இன்னொருத்தருடன் திருமணம் செய்வதா என கேள்விஎழுப்பியுள்ளார்.

டமால் சப்தம்
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சத்யாவை சதீஷ் தண்டவாளத்தில் பிடித்து தள்ளிவிட்டு தப்பியுள்ளார். அப்போது ரயில் வருவதை அறிந்த சக பயணிகளும் சத்யாவின் தோழிகளும் ஓடி போய் சத்யாவை காப்பாற்ற சென்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் சத்யாவின் உடல் துண்டுகளானது. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவியின் உடலை பார்த்து தோழிகள் கதறி அழுதனர். சத்யா மீது ரயில் ஏறிய போது டமால் என மண்டை உடைந்த சப்தம் கேட்டதாக அங்கிருந்த பயணிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications