Exclusive: அமைச்சர் வீட்டில் ஆதிதிராவிடர் நல விடுதி பணியாளர்கள்? அண்ணாமலை புகாருக்கு பதில்
சென்னை: ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி ஊழியர்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது வீட்டில் பணியமர்த்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார்.
அமைச்சர் மீதான இத்தகைய குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அறிய அவரிடமே நாம் பேசினோம்.
அப்போது அவர் ஒன் இந்தியா தமிழிடம் பிரத்யேகமாக கூறிய விவரம் பின்வருமாறு;
செம பரிசு.. பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த.. கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி!
வீட்டு வேலை
''ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி பணியாளர்களை எனது வீட்டில் வேலைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை சிறிய குடும்பம் என்பதால், அமைச்சராவதற்கு முன்பு வரை நானே அனைத்து வீட்டுப் பணிகளையும் செய்துகொள்வேன். அமைச்சரான பிறகு அலுவல் பணி அதிகம் என்பதால் மாதம் ரூ.10,000 வீதம் சொந்த நிதியிலிருந்து ஊதியம் கொடுத்து இரண்டு பணியாளர்கள் வீட்டு வேலைக்கு உள்ளனர்.''
குற்றச்சாட்டு
''குடும்ப உறுப்பினர்கள் குறைவு என்பதால் ஏற்கனவே இருக்கும் பணியாளர்களுக்கே அதிகம் வேலையில்லை. இப்படிப்பட்ட சூழலில் நான் ஏன் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி பணியாளர்களை எனது வீட்டு வேலைக்கு அழைக்க வேண்டும். எதற்காக இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கிளப்பிவிடுகிறார்கள்.''
அமைச்சர் விளக்கம்
''பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக இப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை. திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை என்பதால் இப்படியெல்லாம் சிலருக்கு பேசத் தோன்றுகிறது. துறை சார்ந்த பணிகள் நிறைய இருப்பதால் அதில் தான் கவனம் செலுத்துவேனே தவிர அண்ணாமலை போன்றோர் பேசுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளமாட்டேன்.'' என விளக்கம் அளித்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
தாராபுரம் தொகுதி
இதனிடையே இவர் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இப்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகனை எதிர்த்து தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.முருகனை தேர்தலில் வீழ்த்தியதன் காரணமாகவே இவருக்கு அமைச்சர் பதவி தேடி வந்தது என்பதும் திரும்பிப் பார்க்கத் தக்கது.