இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக? மோதலால் சின்னம் கிடைக்கல.. போட்டியிடாமல் தவிர்த்த அதிமுகவினர்!
சென்னை : அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது அதிமுக.
காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தேனி, மயிலாடுதுறை நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 27ஆம் தேதி மாலையோடு முடிவடைந்த நிலையில், ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே அதிமுகவினர் சுயேட்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
நையாண்டி செய்வீங்களே.. சுயமரியாதை எங்க இப்ப? - திமுகவை ரவுண்டு கட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
கட்சி சின்னம்
கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்த நிலையில் இந்தப் படிவங்களில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற சர்ச்சை எழுந்து.
வேட்பாளர் பட்டியலே அறிவிக்கப்படவில்லை
வேட்பு மனுத் தாக்கல் 27ஆம் தேதி 5 மணியோடு நிறைவடைந்த நிலையில், கடைசி வரை வேட்பாளர் பட்டியலே அதிமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்தந்தப் பகுதியினரே முடிவு செய்து ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தங்கள் கட்சி சார்பில் சிலரை களமிறக்கினர். அவர்களும், கட்சித் தலைமையின் அங்கீகார படிவம் இல்லாத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் சின்னத்தை பெறுதற்கான ஏ மற்றும் பி படிவங்களை இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நிராகரித்த எடப்பாடி
சின்னம் வேண்டும் என அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரையும் வலியுறுத்தி வந்த நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதத்தை கொடுத்து அனுப்பினார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்றும் நீங்கள் தயாராக இருந்தால் அதில் கையெழுத்திட்டு உடனே அனுப்புமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார். ஆனால், ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.
போட்டி இல்லை
இரட்டை இலை சின்னம் அனைவரும் நன்கு அறிமுகமானது என்பதால் அந்த சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை எளிதாக கவர முடியும். ஆனால், கட்சி சின்னம் இல்லாமல் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதோவொரு சின்னத்தில் போட்டியிட்டால் கட்சித் தொண்டர்களின் வாக்குகளைக் கூடப் பெற முடியாது என்பதால், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவினர் போட்டியிடவில்லை. இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது அதிமுக.
Recommended Video
புறக்கணிப்பு
காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாநகராட்சிகள், தேனி, மயிலாடுதுறை நகராட்சிகள், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றில் கூட அதிமுக போட்டியிடவில்லை. ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். ஆனால், கட்சித் தலைமையின் அங்கீகாரம் இல்லாததால் இந்தப் பதவிகளுக்கு சுயேட்சை சின்னத்தில்தான் அவர்கள் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ் -ஈபிஎஸ் மோதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாததால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.