கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவது நடக்காது - ஜெயக்குமார் கிண்டல்
கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது என்று டிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை: கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது என்று டிடிவி தினகரனை விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அமமுகவை நிலை நிறுத்திக்கொள்ளாதவர்கள் எப்படி அதிமுக வை மீட்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்றுவோம் என்ற ஆரம்பம் முதலே கூறி வருகிறார் டிடிவி தினகரன். அமமுகவை வெற்றி பெற வைத்து அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சட்டசபைத் தேர்தலின் போது கூறி தனி அணி அமைத்து போட்டியிட்டார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பிரித்து தோல்விக்கு காரணமாக இருந்த அமமுக, தேர்தலுக்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் காலியானது. சசிகலாவும் தினசரி ஆடியோவை வெளியிட்டு அதிமுகவை கைப்பற்றுவேன் என்று கூறி வருகிறார்.
சசிகலா, டிடிவி தினகரன் பற்றி எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்த ஓபிஎஸ், இன்று மவுனத்தை கலைத்து விட்டார். சசிகலாவினால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று சொன்ன ஓபிஎஸ், ஒரு குடும்பத்தின் கையில் கட்சி போகாது என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

அதிமுகவை கைப்பற்றுவேன்
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்த பேட்டியும் தராமல் அமைதி காத்த டிடிவி தினகரன், திடீரென தலைகாட்டி புதிய போராட்டத்தை அறிவித்துள்ளார். அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் டிடிவி தினகரன் குறித்தும், சசிகலாவின் நிலை குறித்தும் கிண்டலடித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக பொய் வாக்குறுதி
திமுகவிற்கு எதிராக சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சி பிடித்திருக்கிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்கப்படும் என்றும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை என்றார்.

தொடர்பில்லாதவர்கள்
அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் தன்னுடைய நோக்கம் என்ன கூறி இருக்கிறாரே என ஜெயக்குமார் இடத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள் என்றார்.

வாய்ப்பில்லை ராஜா
அவர்கள் கட்சியை மீட்பதெல்லாம் ஆகாத கதை. தன்னுடைய கட்சியையே ஒழுங்காக நிலைநிறுத்தத் முடியாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற போகிறாரா? அதாவது, கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்ட கதையாக இது இருக்கிறது என்று கிண்டலடித்த ஜெயக்குமார், அதெல்லாம் இங்க நடக்கவே நடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications