சட்டசபையில் ஓபிஎஸ் இடம்.. ஜால்ரா போடக்கூடாது.. சபாநாயகர் அப்பாவுக்கு பாயிண்டை கூறிய ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார். இதனை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால் மரபுப்படியும், விதிகள் படியும் சபாநாயகர் அப்பாவு செயல்பட்டு சட்டசபையில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இந்த வேளையில், ‛‛நீங்கள் ஒரு முன்னாள் பேரவை தலைவர். தற்போது உள்ள பேரவைத் தலைவர் ஓ.பி.எஸ் அளித்த கடிதத்தையும்,எடப்பாடி கே.பழனிசாமி அளித்த கடிதத்தையும் படிக்கவில்லை என்கிறார். ஒரு முன்னாள் பேரவைத் தலைவராக இன்னாள் பேரவை தலைவருக்கு ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?'' என கேள்வி கேட்கப்பட்டது.

விதிப்படி செயல்பட வேண்டும்
இந்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் ஏன் அவருக்கு கோரிக்கை வைக்கவேண்டும். விதிப்படிதான் இயங்க முடியும். விதிப்படி அவர் இயங்கவில்லை என்றால் வரலாறு மரபை மீறிப் பேரவைத் தலைவர்,கண்ணியத்தை மீறிய பேரவைத் தலைவர் சட்டத்தை மதிக்காத பேரவைத் தலைவர் என்றுதான் பெயர் வரும்.

ஓபிஎஸ் நீக்கத்தை உறுதி செய்த நீதிமன்றம்
உயர்நீதிமன்றத்தால் ஓபிஎஸ் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சியில் இல்லாத ஒருவருக்குக் கழகத்தின் வரிசையில் எப்படி இடம் ஒதுக்க முடியும். கட்சியில் இல்லாதபோது எப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்க முடியும். பச்சை குழந்தையைக் கேட்டால் அதுகூட சொல்லும். கட்சியில் இல்லாதவரை எப்படி வரிசையில் சேர்க்க முடியும். நீங்கள் இடம் ஒதுக்குங்கள். ஆனால் கழகத்தின் வரிசையில் இடம் ஒதுக்கக் கூடாது. தீர்ப்பு இதற்கு ஆதாரமாக உள்ளது. அதனால்தான் கடிதத்தை நாங்கள் அளித்துள்ளோம்.

ஜால்ரா போடுவாரா?
ஓபிஎஸ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அந்த அடிப்படையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. முறைப்படி செயல்பட்டால் கண்ணியம் காக்கின்ற, மரபு காக்கின்ற, சட்டத்தை மீறாத ஒரு பேரவைத் தலைவர் என்று பெயர் வரும். இல்லை என்றால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுகின்ற பேரவைத் தலைவர் என்ற பெயர்தான் நிச்சயம் இருக்கும். சட்டசபை எண்ணிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும்.

வரும் 17 ம் தேதி தெரியும்
ஓபிஎஸ் உள்ளிட்ட நான்குபேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளதே. அதன் அடிப்படையில்தான் பேரவைத் தலைவர் நிச்சயம் செயல்பட முடியும். அந்த அடிப்படையில் அவர் மரபைக் காப்பவரா,மீறுபவரா,சட்டத்தை மதிப்பவரா,மீறுபவரா,விதியை மீறுபவரா அனைத்தும் வரும் 17ம் தேதி தெரியும். ஆளும் கட்சிக்கு ஜால்ரா தட்டாத நியாயமான விதியை மதிக்கின்ற பேரவை தலைவராக அப்பாவு இருக்க வேண்டும். பேரவைத் தலைவர் இந்த விஷயத்தில் நடுநிலையோடு இருப்பார் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது'' என்றார்.











Click it and Unblock the Notifications