எம்ஜிஆர் உயிலில் சொன்ன மாதிரி நடக்கணும்.. ட்விஸ்ட் கொடுத்த கே.சி.பழனிசாமி - ஷாக் ஆன ஓபிஎஸ் தரப்பு!
சென்னை : அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எம்.ஜி.ஆரின் உயிலைச் சுட்டிக்காட்டி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அதிமுக உட்கட்சி தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி எதிர்த்து வழக்கு: மதியம் விசாரணை
ஒற்றைத் தலைமை
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், இந்தப் பிரச்சனைக்கு மேலும் தூபம் போட்டது. இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வரும் நிலையில் ஒற்றைத் தலைமையே வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முரண்டு பிடித்து வருகின்றனர்.
பொதுக்குழு பூகம்பம்
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது. அப்படி என்றால், தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்தாகி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
கட்சியைக் கைப்பற்ற
இதற்கிடையே அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் நடத்தப்பட்டது. தனது கையெழுத்து இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நாளை அதே அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டி கூட்டம் நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடும் குழப்பம்
இவ்வாறாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும் அதிமுக தலைமைப் பதவி தொடர்பான அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கட்சியில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தொடர்பாக கட்சியின் சட்ட விதிகளை முன்வைத்து இரண்டு தரப்பினருமே கடுமையாக விவாதித்து வருகின்றனர். இதனால், ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்துமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
கேசி பழனிசாமி
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பியும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் உயில்
எம்.ஜி.ஆர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை நாம் தேர்ந்தெடுப்போம். நிச்சயமாக இந்த சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்." என்று தெரிவித்துள்ளார் கே.சி.பழனிசாமி. இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூர் ராஜூ
இதேபோல நேற்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "எம்ஜிஆர் பேச முடியாத நிலையில், கடந்த 1984, 1986 ஆகிய ஆண்டுகளில் கட்சி குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்தார். அதில், 80 சதவீத அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர் தான் இயக்கத்தை வழிநடத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அதிமுக என்றைக்கும் தொண்டர்கள் இயக்கமாகவே இருக்கும்." எனத் தெரிவித்திருந்தார்.
யாருக்கு ஆதரவு?
கே.சி.பழனிசாமி தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் அவரும் இப்போது 80% ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே கட்சியை வழிநடத்த வேண்டும் என எம்.ஜி.ஆரின் உயிலைச் சுட்டிக்காட்டி தெரிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளதால் புதிய நபரை எதிர்பார்க்கிறாரோ என்ற குழப்பமும் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.