சல்லி சல்லியாக நொறுங்கும் ஒபிஎஸ் கனவு..தலைமை பதவியை தட்டி தூக்க தயாராகும் எடப்பாடி..ஆதரவு அதிகரிப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்றைக்கும் தேனி மாவட்டத்தில் இருந்து 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக முழக்கமிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்
அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 2,665 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். இந்த ஆதரவு பலத்துடன் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு 2,442 ஆக அதிகரித்து இருக்கிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்போ தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகவும் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கூறி வருகிறது.

ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள்
இந்த நிலையில் இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறியுள்ளார். மீதம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிலும் பெரும்பாலானவர்கள் இன்னும் சில தினங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகின்றன.

எடப்பாடி பக்கம் சாயும் உறுப்பினர்கள்
இதற்காக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி வருகிறார்கள். இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வருகிற 11ஆம் தேதிக்குள் ஒரு சிலரை தவிர அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்து விடுவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தீர்மானங்கள் ரெடி
எடப்பாடி பழனிசாமியை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்க வேண்டும். இதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. ஒற்றை தலைமை பதவிக்கு தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆதரவு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தலைமை பதவியை தட்டி தூக்க ரெடி
பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட இருப்பது 100 சதவிகிதம் உறுதியாகி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

எடப்படி அணியினர் முடிவு
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படும் தீர்மானமும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்களை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றைத்தலைமை தீர்மானம்
எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வரும் ஒற்றை தலைமை தீர்மானமும் முக்கிய தீர்மானமாக பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளார். இதனிடையே பொதுக்குழுவிற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வாதங்கள் முடிவடைந்த நிலையில் 11ஆம் தேதி 9 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மட்டுமே நம்பியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

கை நழுவும் பதவி
அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால் அதிமுக தலைமை பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து கை நழுவிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்து வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications