எல்லாம் முடிஞ்சு போச்சாமே.. இதுதான் அதிமுக கூட்டணியாமே.. தொகுதிகளும் ஒதுக்கியாச்சாமே..!
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் லேட்டாக புறப்பட்டாலும் லேட்டஸ்டாகவே புறப்பட்டுள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமாரின் கூற்றிற்கேற்ப கூட்டணி பேரம், தொகுதி பங்கீடு என ஜெட் வேகத்தில் சென்று கிட்டத்தட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
பொதுவாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வதும், தேர்தல் என்று வந்துவிட்டால் பழசையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றிணைவது இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ரேஞ்ஜில் உள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணி என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட ஒன்றுதான். காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும். இது வழக்கமான ஒன்றுதான்.
கூட்டணி ரகசியம்
இந்த நிலையில் கூட்டணி என்ற கேள்வி குறித்து ஓபிஎஸ்ஸிடம் கேள்வி கேட்டபோது தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதெல்லாம் பரம ரகசியம் என்றும் கூறியதன் மூலம் அதிமுகவின் கூட்டணி பாஜகவுடன் என்பதை அவர் சூசகமாக குறிப்பிட்டுவிட்டார்.
அதிமுக தயார்
கூட்டணி பேரங்கள் குறித்து தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது அவை கூறிய தகவல்கள் அதிமுகவை பார்த்து அட்ரா சக்கை, அட்ரா சக்கை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆம், அதிமுக விருப்பமனுக்களை பெறுவதில் மட்டும் முந்திக் கொள்ளவில்லை. தேர்தல் கூட்டணி பேரங்கள், தொகுதி பங்கீடு என அனைத்தும் முடித்துக் கொண்டு தற்போது தயார் நிலையில் உள்ளதாம்.
எத்தனை தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் பகீர் தகவலாக பாஜக, தேமுதிக, பாமக ஆகியன இடம்பெறுகிறதாம். இந்த கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல்வர் சொன்னது போல் இதற்கு லீடர் அதிமுகதானாம். மொத்தம் 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறதாம்.
முறைப்படி அறிவிப்பு
அது போல் பாஜகவுக்கும் பாமகவுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாம். தேமுதிகவுக்கு ஓரிரு தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் விஜயகாந்த் கூட்டணி குறித்து முறைப்படி அறிவிப்பார் என கூறப்படுகிறது.
மைல்ட் டவுட்
இத்தனை நாட்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை கூட்டணி இல்லை என்று அதிமுகவினர் கூறினர். மேலும் அதிமுகவின் அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிரான கருத்தையே கூறி வந்தனர். ஆனால் தேர்தலுக்காக வெளியான பட்ஜெட்டை ஆஹா ஓஹோ என முதல்வரும் அவரது சகாக்களும் பாராட்டிய போது நமக்கு மைல்டாக டவுட் வந்தது.
பழைய நண்பர்கள்
அதுபோல் மோடி என்னதான் தமிழக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றாலும் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளன என கூறியிருந்தார். இதில் வாஜ்பாய் காலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக பழைய நண்பர்களும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என மோடி பொடி வைத்தே பேசினார்.
மக்களிடம் விட்டுவிடுவோம்
ஆக கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் தற்போது விளங்குகிறது. தமிழகத்துக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவதாக விமர்சனம் செய்த பாமக, தேமுதிக ஆகியன கூட்டணி அமைக்கிறது என்பதை பார்க்கும் போது இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்பதை மக்களிடமே விட்டு விட வேண்டியதை தவிர வேறு வழியில்லை.