" ஜுலை 17ல் 2 முக்கிய நிகழ்வு".. அதிமுகவின் ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. பின்னணி இதுதான்
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17 ம் தேதி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டம் என்பது சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றும் ஆலோசனை கூட்டம் என்பது நடந்தது. கடந்த 10ம் தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று 3வது நாளாக நடந்தது. இந்த தொகுதி வாரியான ஆலோசனை கூட்டம் என்பது வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் 17 ம்தேதி சென்னையில் நடைபெற இருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் என்பது திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருந்தார். இந்நிலையில் தான் 3 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் என்பது திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதாவது வரும் 17 ம் தேதி மொஹரம் பண்டிகை மற்றும் ஆடி 1 ம் தேதியாகும். இதன் காரணமாக அன்றயை தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்துக்கான மாற்று தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி என்பது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications