2 வருட பிரேக்கிற்கு பிறகு.. சென்னை தீவுத்திடலில் தொடங்கியது பொருட்காட்சி.. குட்டீஸ் ரெடியா?
சென்னை: சென்னை தீவுத்திடலில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியுள்ளது. 70 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சி மார்ச் மாதம் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த கண்காட்சி, மீண்டும் தொடங்கியுள்ளது சென்னை மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும். அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்தவிழாவில், அமைச்சர்கள் கா.ராமசந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுலா கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஹோட்டல் தமிழ்நாடு உணவகம், 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், தீவுத்திடல் முகப்பில் வள்ளுவர் கோட்டம் கல் தேர், மாமல்லபுரம் சிற்பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

தீவுத்திடலில் பொருட்காட்சி
அதன் பின்னர், தீவுத்திடல் வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட், டிரைவ்-இன் தியேட்டரும் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேடையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

70 நாட்கள்
இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது. சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் பெறும் பயன்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற்றுள்ளன.

சுற்றுலா பொருட்காட்சி
மேலும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 32க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சிறுவர்களுக்கான பொழுதுப்போக்கு
சிறுவர்களுக்கு ரயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய்வீடு, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற முக்கியமான கோயில்களின் பிரசாதங்கள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறை அரங்கத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செலுத்தப்படும் 12 வகையான தடுப்பூசிகள், கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications