நுங்கம்பாக்கம் சுவாதி.. இப்போ பரங்கிமலை சத்யா.. சென்னையை உலுக்கிய ரயில்வே ஸ்டேஷன் படுகொலைகள்
சென்னை: ஒரு தலை காதலால் ரயிலில் இருந்து கீழே தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம் (47). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி வரலட்சுமி (43) என்ற மனைவியும் சத்யா என்ற 20 வயது மகளும் உள்ளனர். சத்யா தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23).
துண்டான கல்லூரி மாணவி தலை.. சென்னை ரயிலில் தள்ளிவிட்டு காதலன் வெறிச்செயல்! சதீஷை பிடிக்க 2 தனிப்படை
காதல்
இவர் சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. கல்லூரி செல்வதற்காக இன்று வழக்கம் போல் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா அங்கு ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சத்யா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சதீஷ்
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென தாம்பரத்திலிருந்து வந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். இதில் சத்யா ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
7 தனிப்படைகள்
இதையடுத்து சத்யாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சதீஷை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ரயில்வே போலீஸார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்வாதி கொலை
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜூன் மாதம் 24ம் தேதி காலைநேரம், அப்படி ஒரு சம்பவத்தை சென்னை எதிர்பார்த்திருக்கவில்லை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி, ஒரு இளைஞரால் கொடூரமாக அன்று, கொலை செய்யப்பட்டார். மிக கொடூரமான முறையில் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டது பார்ப்போரை உறைய வைத்தது. ஒரு தலைக்காதலுக்காக கொலை நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தின் ஒரு கிராமத்து ஏழ்மை பின்னணியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்தபோது சுவாதியை ஒருதலையாக காதலித்ததாகவும், ஆனால், சுவாதி காதலை ஏற்க மறுத்ததாகவும், எனவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. போலீசார் பிடிக்க போனபோது தனக்கு தானே கழுத்தில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு ராம்குமார் முயன்றதாகவும் கூறப்பட்டது. இதனால் ராம்குமார் எதையும் பேசவில்லை. இந்த நிலையில் ராம்குமார் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த கொலைக்கான உண்மையான காரணம் என்ன என இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.