2 நாள் தான் ‛டைம்’.. ஈபிஎஸ் ஆலோசனையில் முக்கிய முடிவு..பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு! என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுவேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் தான் பொதுக்குழுவை கூட்டாமல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து மாவட்ட வாரியாக தற்போது அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆதரவு கடிதம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய தலைவர்களுடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் பற்றிய விபரம் வருமாறு:
தலைமை யார்? என்பது தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே கடந்த ஆண்டு மோதல் போக்கு ஏற்பட்டது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான நிலையில் ஓ பன்னீர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகளை நீக்கம் செய்தார்.
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
இந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருவரும் வேட்பாளர்களை அறிவித்தனர். இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர முடிவு செய்திருந்தனர்.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில் தான் பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்றைய விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பித்து. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். வேட்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் நீக்கப்பட்டவர்களும் அழைக்கப்பட வேண்டும். இறுதியில் தேர்வாகும் வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என உத்தரவிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
இந்த உத்தரவு என்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் 2573 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 2000க்கும் அதிகமானவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாஜி எம்எல்ஏ தென்னரசு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரெசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தீவிர ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசித்தது என்ன?
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்ய கூறியது சாதகமாக இருந்தாலும் கூட பிப்ரவரி 7 ம் தேதிக்குள் இதனை செய்வது என்பது சவாலானதாக இருக்கும் என்பதால் அதுபற்றிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களையும் பொதுக்குழுவில் இணைத்து கருத்து கேட்க உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு மட்டும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பொதுக்குழு கூட்டப்படாமல் ஆதரவு கடிதம் பெறப்பட்டால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்குமா? இல்லையா? இதில் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து என்ன? செய்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பபடுகிறது.
2 நாளில் முடிக்க திட்டம்
அதன்படி இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்த கடிதங்களை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தொடர்பான அம்சங்களை எழுத்துப்பூர்வமாக திங்கட்கிழமை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பணியை நேற்று இரவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு துவக்கி உள்ள நிலையில் இன்றும், நாளையும் முழுவீச்சில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஆர்வமாக உள்ளது.