ஓவர் நைட்டில் பாஜக தொண்டர்களாகி விட்ட "அதிமுக"வினர்.. கொடியுடன் திரண்டு அமித் ஷாவுக்கு வரவேற்பு!
அமித்ஷாவை அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்றுள்ளனர்
சென்னை: ஓவர் நைட்டில் பாஜக தொண்டர்கள் எல்லாம் அதிமுக தொண்டர்களாகி விட்டார்களா தெரியவில்லை.. சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை வரவேற்க திரண்டிருந்த கூட்டத்தில், முக்கால்வாசி பேர் அதிமுக தொண்டர்கள்தானாம்.. பாஜகதலைவர் ஒருவரை வரவேற்க அதிமுக கொடியுடன் தொண்டர்கள் திரண்டது இதுவே முதல்முறை என்ற வரலாற்று சிறப்பு மிக்க விஷயமும் இன்று தமிழகத்தின் தலைநகரில் உருவாகி உள்ளது.
கட்சி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.. ஏர்போர்ட் வந்த அமித்ஷா, அங்கிருந்து லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது வழியெங்கும் தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்... சாலையோரம் இருந்த அதிமுக உள்ளிட்ட பாஜக தொண்டர்களை பார்த்து, அமித்ஷா காரிலிருந்து இறங்கிவிட்டார்..
தொண்டர்கள்
பிறகு, அந்த தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு ரோட்டில் நடந்து சென்றார். இதைபார்த்ததும், தொண்டர்கள் பரவசம் அடைந்து விட்டனர்.. அமித்ஷாவுக்கு தமிழ் புரிகிறதோ இல்லையோ, "தமிழகத்தில் தாமரை மலரும்" என்று முழக்கமிட்டு கொண்டே இருந்தனர்.
பதாகை வீச்சு
அப்போதுதான், யாரோ ஒருவர் அமித்ஷா மீது பதாகை வீச முயன்றார்.. இருந்தாலும் சுதாரித்து கொண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, உடனடியாக பாதுகாப்பையும் பலப்படுத்தினர்.. இந்த அமித்ஷா வருகையில் ஒருசில விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.
அதிமுகவினர்
ஒன்று, அமித்ஷாவை வரவேற்க வந்திருந்த பெரும்பாலானோர் அதிமுக தொண்டர்களாக இருந்ததுதான் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இதற்கு முன்புகூட அமித்ஷா பலமுறை தமிழகம் வந்திருக்கிறார்.. அப்போதெல்லாம் பாஜகவின் ஒரு பகுதியினர்தான் திரண்டு வரவேற்பு தருவார்கள்.. ஆனால், இந்த முறை எதற்காக அதிமுக தொண்டர்கள் அதிகம் என்று தெரியவில்லை. ஒருவேளை, முதல்வர், துணை முதல்வரை வரவேற்க இவர்கள் எல்லாம் சென்றார்களா என்றும் தெரியவில்லை. அப்படியே சென்றிருந்தாலும், இவ்வளவு அதிமுக தொண்டர்கள் முதல்வருக்காக கூடியதே இல்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
முதல்வர்
அடுத்ததாக, மத்தியில் இருந்து எந்த அமைச்சர்கள் இங்கு வந்தாலும், நம் மாநில அமைச்சர்கள்தான் அவர்களை சென்று வரவேற்பது வழக்கம்.. ஆனால், இன்று முதல்வரே நேரடியாக சென்றிருக்கிறார்.. அமித்ஷாவுக்காக காத்திருந்திருக்கிறார்.. இதற்கு முன்பு அமித்ஷா வரும்போதுகூட இப்படியெல்லாம் நடந்ததில்லை.. முதல்வரே ஏர்போர்ட்டுக்கு சென்றது ஆச்சரித்தின் அடுத்த லெவலுக்கு நம்மை இட்டு சென்றுள்ளது.
கூட்டம்
இதுதான் தற்போது தமிழகத்தின் பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.. "நிஜமான அதிமுக எல்லாம் அம்மாவோட போச்சு.. இப்போ அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் என்ற பாகுபாடே இல்லை.. ரெண்டு பேருமே ஒன்றுதான், அதை ஏன் பிரிக்கறீங்க? என்றும், என்னைக்கு ஒரு மத்திய அரசு மாநில அரசுடன் சேருதோ, அப்பவே அந்த மாநிலம் மேலே எழும்பாது" என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
ஏர்போர்ட்
அதுமட்டுமல்ல, அமித்ஷாஜி இங்கே வருகிறார் என்று சொன்னாலே எல்லாரும் பயந்துக்கிறாங்க என்று எல்.முருகன் யாரை சொன்னார் என்று இதுவரை தெரியாவிட்டாலும், இன்று ஏர்போர்ட்டில் கூடிய அதிமுக கூட்டம் எதையோ உணர்த்துவது போலவும் உள்ளது.. பாஜக என்ற கட்சிக்கான முக்கியத்துவத்தை அதிமுக இன்று சற்று கூடுதலாக தந்துள்ளது.. இந்த முக்கியத்துவம், அக்கட்சி ஒதுக்கும் சீட் எண்ணிக்கை, முதல்வர் வேட்பாளர் விவகாரங்களிலும் சேர்ந்து எதிரொலிக்குமா என்று தெரியவில்லை!