சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் முதல்வர் வேட்பாளரை வெளியிட்ட அதிமுக
அக்டோபர் 7ஆம் தேதி 10 மணிக்கு சொன்னபடி முதல்வர் வேட்பாளரை வெளியிட்டுள்ளது அதிமுக.
சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றி அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று வைத்திலிங்கம் சொன்னபடி சொன்ன நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா
முதல்வர் வீட்டில் அமைச்சர்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சென்றனர்.
ஓபிஎஸ் வீட்டில் கட்சி நிர்வாகிகள்
அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மராத்தான் ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி அனுப்பியதை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்கள். வழிகாட்டுதல் குழுவில் யார் யாரை சேர்க்கலாம் என்ற ஆலோசனை பின்னர் நடைபெற்றது.
தொடர்ந்து நடந்த ஆலோசனை
அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் வீட்டில் பேசப்பட்ட விஷயங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தெரிவித்தனர்.
உச்சக்கட்ட பரபரப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நேற்று காலை தொடங்கிய ஆலோசனை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாறி மாறி முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
10 மணிக்கு நல்ல செய்தி
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,
இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி கிடைக்கும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் நடக்கிறது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறிவிட்டு சென்றார். அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வெளியாகுமா? பார்க்கலாம்.