இது 3வது முறை.. ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி சொன்ன ஓபிஎஸ்.. என்ன காரணம்.. ஆச்சர்யத்தில் திமுக!
சென்னை: தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும்
அவர் மூன்று முறை நன்றி தெரிவித்திருப்பது ஆச்சர்யமான ஆரோக்கியமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அண்மையில் ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஒரு நாளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
பிபிஇ கிட்டோடு.. களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கொரோனா வார்டில் அதிரடி விசிட்.. கோவையில் தீவிர ஆய்வு
குழந்தைகளுக்கு நிதி
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம்
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு உதவிதொகை
அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லாது உறவினர்/ பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும். ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு வைக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
ட்விட்டரில் நன்றி
முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
என்ன காரணங்கள்
முன்னதாக அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள் நீக்கப்படக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலினிடம் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் அளித்த அரசு, அப்படி யாரும் நீக்கப்படமாட்டார்கள் என்று விளக்கம் அளித்தது. இதற்கும் ஒ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து இருந்தார். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்ததற்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்திருந்தார்.
கலந்து கொண்ட ஓபிஎஸ்
இதேபோல் அண்மையில் தேனியில் நடந்த திமுக அமைச்சர்கள் நடத்திய அரசு துறை கூட்டங்களில் எம்எல்ஏ என்ற முறையில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். முதல் அமைச்சர் ஐ பெரியசாமியின் கூட்டத்திலும் மறுநாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்திய கூட்டத்திலும் பங்கேற்று ஆலோசனைகளை வழஙகினார். தொடர்ந்து எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், முதல்வர் ஸ்டாலினுடனும், திமுக அரசுடன் ஆரோக்கியமான போக்கை கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் ஓபிஎஸ் மென்மையாக நடந்து கொள்ளும் அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டானுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.