’அவரை' மட்டும் தொடாதீங்க! எடப்பாடி முக்கிய அட்வைஸ்! அதிமுக மா.செ. கூட்டத்தில் ஆப்செண்டான மதுரை மாஜி!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் எம்ஜிஆர் மாளிகையில் நேற்று முன் தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 6ஆம் தேதி, அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன் தினம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பிப்பது, கூட்டணி கட்சிகளை அழைப்பது, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவைத் தவிர மற்ற அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பல முக்கிய அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சி வலுவாக இருந்தால் கூட்டணி தானாக அமையும். எனவே திமுக பாஜக கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க கூடாது என ஆரம்பத்திலேயே உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் கூட்டணி தொடர்பாகவோ, விஜய் கட்சி தொடர்பாகவோ எதுவும் பேசக்கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது.
கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், கூட்டணி தொடர்பான விவகாரங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். கட்சியை வலுவாக வைத்திருந்தால்தான் கூட்டணி அமையும். திமுக பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் குறித்து பேச வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் திமுக தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் இருக்கும் நிலையில் அதை போராட்ட வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காகத்தான் நான் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
2010ல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை சரியில்லை என தேர்தலுக்கு சரியாக ஓராண்டுக்கு முன்பிருந்தே ஜெயலலிதா பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். மேலும் அதிமுக சார்பாக மாதத்திற்கு இரண்டு முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. தற்போது அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும் 2026 வரை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திமுக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவிலும் கள ஆய்வு பணிகளுக்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ,வேலுமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் செம்மலை, வளர்மதி, அருணாச்சலம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கலப்பணிகளை துரிதப்படுத்த உள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கியமான ஒரு முன்னாள் அமைச்சர் மிஸ் ஆனதாக கூறப்படுகிறது. அதாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரை மாநகராட்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரான ஆர்பி உதயகுமார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆன ராஜன் செல்லப்பாவும் கலந்து கொண்டனர். நவம்பர் 16ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.
மாநகராட்சி எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கும் நிலையில் அதில் முன்னாள் அமைச்சரும் மாநகர் செயலாளர் செல்லூர் ராஜு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்திருக்கிறது. மேலும் செல்லூர் ராஜூ ஏன் வரவில்லை என சில நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கந்த சஷ்டி விழாவுக்காக கதிர்காமம் முருகன் கோவில் விழாவில் பங்கேற்க இலங்கை சென்றிருக்கிறார் செல்லூர் ராஜு. மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடம் இது குறித்த அவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications