பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர!
சென்னை : கொரோனா பரவல் தொடர்ந்து வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு நடத்த தடை ஏற்பட்டால், ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தை பிளான் -பி ஆக எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் பினாமி முதலீடு.. ஈபிஎஸ் ஆதரவாளர் கிலோ கணக்கில் தங்கம்.. பகீர் குற்றச்சாட்டுகள்- பரபர அதிமுக!
ஒற்றைத் தலைமை நெருப்பு
அதிமுகவில் ஜூன் 14ஆம் தேதி நடந்த மா.செக்கள் கூட்டத்தில் தொடங்கிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி, கடந்த 20 நாட்களாக அதிமுக பரபரத்து வருகிறது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என அதிமுகவில் பெரும்பாலோனர் அணி திரண்டுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஓபிஎஸ். இந்த விவகாரத்துக்கு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 23 தீர்மானங்களைத் தாண்டி வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பெற்ற தடை உத்தரவால் ஒற்றைத் தலைமை நெருப்பு இன்னும் கனன்று வருகிறது.
ஜூலை 11
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தக் கடிதத்தில் தலைமை நிலைய செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு அனுப்ப ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.
முழுவீச்சில் ஏற்பாடுகள்
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தும் பொறுப்பும் முந்தைய பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
குறுக்கே வந்த கொரோனா
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. அவரது உதவியாளர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு நெருக்கமான பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த விஷயத்தை சீரியஸாக அணுகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
விசாரிக்கும் ஈபிஎஸ்
நாள்தோறும் வரும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தனது ஆதரவாளர்களிடம் கேட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு நிகழ்விற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளது. இதற்காகவே, உள்ளரங்கத்தில் பொதுக்குழு நடத்தாமல் விசாலமான இட வசதிக்காக திறந்தவெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் பொதுக்குழு
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு அரசு தடை விதிக்க வாய்ப்பிருக்கிறதா என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்துள்ளனர். இதையடுத்து ஆன்லைன் மூலம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த மாற்றுத் திட்டம் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிளான் பி
பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து, இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் கொரோனா சதி செய்து பொதுக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க தயாராக இருங்கள் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.