தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் சசிகலா ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குகிறதா அதிமுக?
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் சசிகலா ஆதரவாளர்களுக்கு வரும் சட்டசபை தேர்தலில் சீட் வழங்க அதிமுக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையிலிருந்து வந்த சசிகலா சென்னை திரும்பிய போது " நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் மக்களை சந்திப்பேன்" என்றார். இதனால் சசிகலா மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவே கூடாது. நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதனால் அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
சசிகலா
அதிமுகவை தனது தலைமையின் கீழ் கொண்டு வருகிறேன் என்ற சசிகலா திடீரென இத்தகைய முடிவை அறிவிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாஜக தலையிட்டு அதிமுகவின் ஈபிஎஸ்- ஓபிஎஸ்- சசிகலா ஆகியோரிடையே "சுமூக தீர்வை" கொண்டு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் சீட்
இந்த தேர்தலில் அதிமுக தோற்றால் அதற்கு சசிகலா காரணமாகிவிடக் கூடாது என அறிவுரைகள் சொல்லப்பட்டதாம். இதையடுத்துதான் சசிகலா மனம் மாறி இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தனது ஆதரவாளர்களுக்கு வரும் தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என சசிகலா தரப்பு ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பிடம் தூதுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தகுதி நீக்கம்
தனது ஆதரவாளர்களில் குறைந்தபட்சம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்காவது சீட் கொடுக்க வேண்டும் என சசிகலா தரப்பு கேட்டதாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் வெற்றிவேல் காலமாகிவிட்டார். தங்கம் தமிழ்ச்செல்வனும் செந்தில் பாலாஜியும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
9ஆம் தேதி பட்டியல்
சாத்தூர் சுப்பிரமணியன் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பிவிட்டார். இதனால் மீதமுள்ள 14 பேரில் குறைந்தபட்சம் 10 பேருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதை அதிமுக தரப்பு ஒப்புக் கொண்டதாம். இதையடுத்து வரும் 9-ஆம் தேதி வெளியாகும் பட்டியலில் சசிகலாவின் கோரிக்கை நிறைவேறும் என தெரிகிறது.