கோர்ட்டில் முடியாது.. 2 பேர் கையில்.. குட்டையைக் குழப்பும் தலைகள்.. என்ன வேணும்னாலும் நடக்கலாம்!?
சென்னை : அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவே இறுதித் தீர்வைத் தரும் எனக் கருதப்பட்டு வரும் நிலையில், அதிமுக விவகாரம் நீதிமன்றத்தின் கையில் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில், இரு தரப்பினருமே, சமரசத்திற்குத் தயாராகி வருவதுபோல பேசி வருவதால், கோர்ட் தீர்ப்பு அதிமுகவில் எந்த உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தாது என்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போதே, ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த புள்ளிகள், ஓபிஎஸ் தனது தவறை உணர்ந்து வந்தால், அவரை இணைத்துக் கொள்ளத் தயார் எனப் பேசி வருகின்றனர்.
இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. எனினும், இந்த வழக்கின் இறுதி உத்தரவு அதிமுகவை கட்டுப்படுத்தப் போவதில்லை என்கிறார்கள்.
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? அம்மா இறந்த இந்த நன்னாளிலே..துதியை மாற்றி பாடிய இபிஎஸ்! மாஜிக்கள் வேற!
பொதுக்குழு வழக்கு விசாரணை
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோரின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று (டிசம்பர் 6) அடுத்தகட்ட விசாரணை நடைபெறுகிறது. இரு தரப்பும் தங்கள் வாதங்களை, தங்கள் தரப்பிற்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கு முடிவடையும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருக்கிறது. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பே அதிமுகவின் சூழலை தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.
கோர்ட் உத்தரவு தீர்வாகாது
இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சியில் நிலவும் பிளவுக்கு சட்டப்பூர்வமான தீர்வு கிடைக்காது என்பது அதிமுக மோதல் சூழலை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளின் வழக்கறிஞர்கள், அதிகாரம் யாருக்கு என சமர் புரிந்து கொண்டிருக்கும் சூழலில் இங்கு களத்தில் வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளைச் சேர்ந்தவர்களின் பேச்சுகள், நீதிமன்றத்தால் எந்த தீர்வையும் கொடுக்க முடியாது என்பதையே உறுதி செய்கின்றன எனக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரவு உதவாது
அதாவது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எப்படி இருந்தாலும், தேர்தலைக் கருத்தில் கொண்டோ அல்லது பாஜகவின் நிர்பந்தங்களாலோ ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணையும் சூழல் வரலாம். அந்த திசையிலேயே அதிமுகவினரின் பேச்சுகள் அமைந்து வருகின்றன. அப்படி ஏற்படும் பட்சத்தில், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு என்பது செல்லாததாகி விடும். பொதுக்குழு செல்லும், செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவெல்லாம், ஓபிஎஸ், ஈபிஎஸ் இணையும் பட்சத்தில் சுக்கு சுக்காகச் சிதறிவிடும், அந்தவகையில் நீதிமன்றத்தின் இத்தனை விசாரணைகளும், உத்தரவும் அதிமுகவை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்கிறார்கள்.
ஓபிஎஸ்ஸை ஏற்கத் தயார்
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அணியின் முக்கிய புள்ளியான ஆர்பி உதயகுமார் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி தாயுள்ளதோடு செயல்படுகிறார். அனைவரையும் அவர் வருக வருக என அன்போடு வரவேற்கிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வெற்றிகரமாக வழிநடத்துகிறார். அவர் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார். சட்டப்பேரவை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறாததற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. தனது தவறை உணர்ந்து எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்கத் தயார் எனக் கூறியிருந்தார்.
ஒரே அணியில்
அதேபோல ஓ.பன்னீர்செல்வம் அணியின் டாப் லீடரான வைத்திலிங்கம், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். ஒன்றிணைய மாட்டோம் எனச் சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து, கூறிவருகிறார். சில முன்னாள் அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரது ஒற்றுமைக்கும் எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர் தனிமைப்படுத்தப்படுவார் எனப் பேசி இருக்கிறார்.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி வரும் அதேநேரத்தில், அவர் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். இப்படியாக, இரு தரப்பினர் மத்தியிலும் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இதனால், தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமியே, ஓபிஎஸ் உடன் இணக்கமாகச் செல்லச் சம்மதிக்கலாம். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட தயார் என்றால் டெல்லியின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார், ஆனால், ஈபிஎஸ் அதற்கும் முழுமனதோடு தயாராகவில்லை என்கிறார்கள்.
எதிரெதிர் கொள்கைகள்
காலங்காலமாக எதிரெதிர் நிலைப்பாடுகளை, கொள்கைகளை கொண்டவர்களே ஒரே நாளில் தங்கள் முரண்களை எல்லாம் மறந்து இணைந்து கொள்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸும் ஆரம்பகாலம் முதல் ஒரே கட்சியில் இருந்தவர்கள். அவர்களுக்குள் இருப்பது ஈகோ யுத்தம் தான், அதை எளிதில் சரி பண்ணிவிட முடியும். இருவரில் எந்த அணியில் இருக்கும் அதிமுக அடிமட்டத் தொண்டர்களாக இருந்தாலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தால் மகிழ்ச்சியடையவே செய்வார்கள். தொண்டர்கள் இந்தப் பிளவை விரும்பவில்லை என்பதால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைவது எந்த சூழலிலும் நடக்கலாம் என்கிறார்கள்.
இறிதியில் தொண்டர்களே
அப்படி நடந்தால், அதனை எந்த உச்சபட்ச நீதி அமைப்பின் உத்தரவும் ஒன்றும் செய்ய முடியாது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக மாறி மாறி நடந்து வரும் வழக்குகளும், இதுவரை வந்த உத்தரவுகளும், நியமனங்களும், ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸின் ஒற்றுமை எனும் ஒரே முடிவில் ஒன்றுமில்லாமல் போகக்கூடும். எனவே, அதிமுக விவகாரத்தின் இறுதி தீர்வு நீதிமன்றத்தின் கையில் இல்லை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் கைகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.