கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.1 கோடி கேட்டது உண்மைதான்.. ஆனால்.. கே.பி.முனுசாமி பரபர விளக்கம்
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் பணம் கேட்டது உண்மைதான்- கே.பி.முனுசாமி
சென்னை: கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் ரூ 1 கோடி பணம் கேட்டது உண்மைதான் என கே.பி. முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளராக உள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ரூ 1 கோடி பணம் கேட்டதாக ஒரு ஆடியோவை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சீட் பெற்று தர ரூ 1 கோடி லஞ்சமாக கேட்டதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். அந்த ஆடியோவில் கிருஷ்ணமூர்த்தி முதலில் 50 லட்சத்தை ஏற்பாடு செய்துவிட்டேன். அதை தற்போது கொடுத்து விடுகிறேன்.

50 லட்சம் பணம்
மீதி 50 லட்சம் பணத்தை மாலைக்குள் ரெடி செய்து கொடுத்து விடுகிறேன். முதலில் 50 லட்சம் பணத்தை எப்படி கொடுப்பது என கே.பி.முனுசாமியிடம் கேட்கிறார். அதற்கு அவரோ என் மகனை அனுப்புகிறேன், கொடுத்துனுப்புங்கள் என்கிறார். இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக தனியார் சேனல் ஒன்று கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியது.

கடனாக கேட்டேன்
அப்போது முனுசாமி கூறுகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் ரூ 1 கோடி பணம் கேட்டது உண்மைதான். ஆனால் எதற்காக கேட்டேன். அவர் என்னைவிட வயதில் சிறியவர். அதை சொன்னால் வெட்கக்கேடு. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் எல்லாருக்கும் பணம் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் பணம் கொடுக்கவே இல்லை.

தேர்தல் செலவு
அதனால் தேர்தல் செலவுக்கு எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ 1 கோடி கேட்டேன். அது போல்தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். கடனாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் கேட்டேன். கடன் கேட்ட பணத்தை நான் லஞ்சம் கேட்டதாக கூறுவது கேவலம். என்னை பற்றி பன்னீர் செல்வத்திற்கு நன்றாக தெரியும்.

மனசாட்சி
கடனாக கேட்ட பணத்தை மனசாட்சியே இல்லாமல் இப்போது வெளியிடுகிறாரே கிருஷ்ணமூர்த்தி, அதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. நான் பேசிய ஆடியோதான் , நான் மறுக்கவில்லை. இதுவரை எத்தனையோ பேருக்கு பெரிய பெரிய பதவிகளை பெற்று கொடுத்தேன், ஒரு ரூபாய் கூட பெற்றதே இல்லை என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நான் எப்போதோ பேசிய ஆடியோவை தற்போது சமயம் பார்த்து ரிலீஸ் செய்வது வேதனையை கொடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆடியோ விவகாரம்
இந்த ஆடியோ விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் பேசுகையில், இந்த ஆடியோவில் பேசியுள்ளது உண்மையா என தெரியவில்லை. அப்படியே உண்மையாக இருந்தாலும் சட்டசபை தேர்தல் நேரத்தில் அந்த பணத்தை கே.பி.முனுசாமி கேட்டார் என்றால் , அதை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு கொடுப்பதற்காகத்தானே இருக்கும். ஒரு விஷயத்தை நம்பி சொல்கிறோம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்வது போல் ஆடியோவை ரிலீஸ் செய்து கேவலப்படுத்தலாமா? இத்தனை நாட்கள் விட்டுவிட்டு இப்போது ஏன் வெளியிடுகிறார்கள். அனைத்திலும் தோல்வி அடைந்ததால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஓபிஎஸ் தரப்பு வந்துவிட்டதால் இது போல் எதையாவது செய்கிிறார்கள். இந்த சால்ஜாப்பு வேலை எல்லாம் ஈரோடு கிழக்கு தொகுதியில் எடுபடாது என்றார்.

ஏன் ஆடியோ வெளியீடு
இதுகுறித்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இது போல் சீட்டுக்கு காசு கேட்பது எல்லாம் சகஜமான விஷயம் என்பதால் நாங்கள் இதை வெளியிட நினைக்கவில்லை. ஆனால் எப்போது அவர் ஓபிஎஸ்ஸை பற்றி தவறாக இன்று பேசினாரோ அப்போதுதான் முடிவு செய்தோம். ஓபிஎஸ் கட்சிக்காக உழைக்கவில்லை , தனது சுயநலத்திற்காகவே பாடுபட்டார் என கே பி முனுசாமி விமர்சித்திருந்தார். எனவே முனுசாமி யாருக்கு வேலை பார்க்கிறார் என்பதை இந்த தொண்டர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆடியோவை ரிலீஸ் செய்தோம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications