ராமநாதபுரத்தை பாஜகவிற்கு தூக்கி கொடுத்த அதிமுக.. சாலையில் படுத்து உருண்டு போராடி அதிமுகவினர் ஆவேசம்!
சென்னை: அதிமுக கடந்த முறை வெற்றி பெற்றிருந்த ராமநாதபுரம் தொகுதி இந்த முறை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் மணிகண்டனுக்கு ஒதுக்கப்படாததை கண்டித்து அதிமுகவினர் பாம்பன் பாலத்தில் தரையில் உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது அவர்கள் இடம் பெறும் கூட்டணிகள் தான் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கக் கூடியதாக கடந்த காலங்களில் இருந்து வந்திருக்கின்றன.
ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய நகராட்சிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மண்டபம் பேரூராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் என 3 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.
மக்கள் தொகை
இந்த தொகுதியில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 6 ஆயிரத்து 372. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 பேர்.பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 589 பேர். மூன்றாம் பாலினத்தர் 21 பேர். இங்கு முக்குலத்தோர், முஸ்லிம், தேவேந்திரகுல வேளாளர், கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்கள் உள்பட பல்வேறு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
சமபலம்
ராமநாதபுரம் தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது. இதுவரை 15 தடவை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க-6, தி.மு.க-4, காங்கிரஸ்-3, ம.ம.க., சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் மணிகண்டன் வெற்றி பெற்றார். அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கினார்.
அதிமுகவினர் எதிர்ப்பு
இந்நிலையில் மணிகண்டனுக்கு ராமநாதபரத்தில் போட்டியிட அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை. அதற்கு பதில் இந்த தொகுதியை பாஜகவிற்கு கொடுத்துவிட்டது. இதற்கு அதிமுகவினர் மற்றும் மணிகண்டனின் ஆதரவாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாஜகவிற்கு வேலை செய்ய மாட்டோம்
ராமேஸ்வரம் பாம்பன் நெடுஞ்சாலையில் தரையில் உருண்டு புரண்டு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்தினர். இந்த தொகுதியில் பாஜகவிற்கு வேலை செய்ய மாட்டோம் என்று அங்கிருந்த பலர் ஆவேசகுரல் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.