ரிப்பீட்..ஓபிஎஸ் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்! என்ன ரிசல்ட் வரும்?
சென்னை : அதிமுகவில் நீக்கப்பட்டதற்கு பிறகு தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், வைத்தியலிங்கம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி சென்னையில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டதோடு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு
மேலும் அதே பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் வகித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதோடு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகள் அதிமுகவில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு அடுத்த நாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் ஓபிஎஸ்.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
மேலும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி இருந்தார்.
அவசர அவசரமாக கொரியர் மூலம் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் தனக்கு இருக்கும் அதிகாரம் தற்போது வரை தொடர்வதாகவும், ஒற்றைப் பதவி அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் மற்றும் பிற புதிய பதவிகள் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளது செல்லாது என வலியுறுத்தி இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்
மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்கினால் அதை ஏற்கக் கூடாது என கூறியிருந்தார். குறிப்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தவிர வேறு பதவி இடங்களை அதிமுகவின் அனுமதிக்க கூடாது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக தனது தரப்பு ஆதரவாளரான வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார் ஓபிஎஸ்.

வைத்தியலிங்கம் நியமனம்
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைத்தியலிங்கத்தை நியமித்துள்ளதாக ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தான் எனவும் அத்துடன் ஜேசிடி பிரபாகர் மனோஜ் பாண்டியன் மற்றும் பிற சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
அடுத்து நடைபெற உள்ள தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அவரது கடிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வழக்கை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications