இது தான் உங்கள் கொள்கை என்றால்.. இனி அதிமுக என பெயர் எதற்கு.. முக ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: முத்தலாக் மசோதாவை கடந்த முறை எதிர்த்த அதிமுக, இந்த முறை ஆதரிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் கொள்கையை ஏற்று பாஜகவிடம் அதிமுக கட்சியை குத்தகைக்கு விட்டுவிட்டதாகவும். இனி அதிமுக என்ற பெயர் எதற்கு என்றும் கட்டாமாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த முறை முத்தலாக் மசோதாவை "இது பா.ஜ.க.வின் கம்யூனல் அஜெண்டா" என்று தாக்கினார் அதிமுகவின் பாரளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா.
இன்று ஆதரவு
ஆனால் இன்றைக்கு தன் பதவியைத் தக்க வைக்க முதல்வர் பழனிச்சாமியும், தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி பெற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுகவையும்- அதிமுக அரசையும் பா.ஜ.க.விடம் குத்தகைக்கு விட்டு விட, பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை ஆதரித்திருக்கிறது அ.தி.மு.க.
இப்போது ஆதரவு
அதே போல, மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அந்த மசோதாவிற்கும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக.
பாஜவின் மறுபதிப்பு
அது மட்டுமா? மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பெறும் சட்ட திருத்த மசோதாவிற்கும் மனப்பூர்வமாக ஆதரவாம். பா.ஜ.க.வின் மறு பதிப்பாகவே அதிமுக மாறியிருக்கிறது.
அதிமுக பெயர் எதற்கு
சிறுபான்மையினர் நலன், மாநிலத்தின் உரிமைகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு, "பா.ஜ.க.- ஆர்எஸ்எஸ் கொள்கையே எங்கள் கொள்கை" என்று செயல்படுவதற்கு மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய "அதிமுக" என்ற பெயர் எதற்கு?
இரட்டை வேடம்
தமிழகத்தில் ஒரு நாக்காகவும், பாராளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்றும் இந்த இரட்டையரின் கபட வேடங்களைப் பார்த்தால் "இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று, எம்ஜிஆர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது" என்று விமர்சித்துள்ளார்.