அதிமுகவில் திடீர் பரபரப்பு- மீண்டும் ஜெ., ஜா அணிகள்? ஜே.சி.டி. பிரபாகர் பேச்சால் வளர்மதி கொந்தளிப்பு
சென்னை: அதிமுகவில் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வரும் என அந்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லை. அதிமுக பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.சி.டி.பிரபாகரன், ஜெயலலிதா தலைமை சரியில்லை எனப் பேசப் போய் மாஜி அமைச்சர் வளர்மதி ரொம்பவே கொந்தளித்துவிட்டார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
எம்.ஜி.ஆர். மறைந்த போது அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அதிமுகவின் சின்னமான இரட்டை இலையும் முடங்கியது. அப்போது இருதரப்பும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. இந்த மோதல்களால் 1989 சட்டசபை தேர்தலில் அதிமுக அணிகள் இரண்டும் தோல்வியைத் தழுவ திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது திடீரென அதே போல ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுகவில் புதிய சலசலப்பு கிளம்பியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்விழா ஆண்டு ஆலோசனை
அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்துவது குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகள், வழிகாட்டும் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட நேற்றைய கூட்டத்தில் விரிவாக எடப்பாடியும் பன்னீரும் ஆலோசனை செய்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா மீது புகார்
பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அதில் ஜே.சி.டி.பிரபாகர் பேசும் போது முன்னாள் அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு பேசியதால் சலசலப்பு உருவானது. ஜேசிடி பிரபாகர் பேசும்போது, 10 லட்சம் தொண்டர்களை வைத்திருந்த எம்.ஜி.ஆர்., திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தார். ஆனால், ஒன்னரை கோடி தொண்டர்களை பெற்றிருந்த ஜெயலலிதாவால், அது முடியவில்லை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை வீழ்த்தி 3 முறை திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. அப்படியானால் தவறு எங்கே இருக்கிறது என ஆராய வேண்டும். கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் உணர்ந்து நமது அரசியலை முன்னெடுத்தால் தான் திமுகவை வருங்காலத்தில் வீழ்த்த முடியும்'' என்று சொன்னார்.

ஜெ.வுக்கு எதிராக பேசுவதா?
ஜெயலலிதாவின் தலைமையை குறை சொல்வது போல ஜே.சி.டி. பிரபாகரின் பேச்சு இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வளர்மதி பேச முயற்சித்தார். ஆனால் அவர் நிர்வாகிகளால் தடுக்கப்பட்டார். தொடர்ந்து பேசிய பிரபாகர், அதிமுக தலைமையகம் இருக்கும் இந்த அலுவலகத்தை கொடுத்தவர் ஜானகி அம்மாள். அதனால் அவருடைய படத்தையும் கட்சி அலுவலகங்களில் வைக்க வேண்டும். இனி எம்ஜிஆர்-ஜெயலிதா படங்களை பயன்படுத்தும் போது சிறிது பெரிது என இருக்கக்கூடாது. இருவரின் படங்களும் ஒரே சைசில் இருக்க வேண்டும். இதற்கான கட்டளையை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர்.மாளிகை என பெயர் சூட்ட வேண்டும். பொன்விழா ஆண்டில் இந்த பெயரை சூட்டுவது பொறுத்தமாக இருக்கும்'' என்றார்.

ஜானகி அம்மாளுக்கு என்ன தொடர்பு?
அப்போது குறுக்கிட்டு பேசிய வளர்மதி, இந்த கட்டிடத்தை ஜானகியம்மாள் வழங்கியதாக எந்த அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை. கட்டிடம் தானம் வழங்கப்பட்டதாக உயில் ஏதேனும் இருக்கிறதா? உயிலை படித்துப் பார்த்தீர்களா? '' என்று கேள்வி எழுப்ப, வைத்தியலிங்கம் குறுக்கிட்டு, '' அவர் பேசுவதற்கும் நீங்கள் பேசுவதற்கும் தொடர்பில்லை. அமைதியாக இருங்கள் '' என்று சொல்ல மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை புறக்கணித்து வெளியேற முயற்சித்தார் வளர்மதி. அவரை சமாதானப்படுத்தி அதிமுக நிர்வாகிகள் உட்கார வைத்தனர். அதிமுகவில் இப்போது ஜே.சி.டி.பிரபாகரின் பேச்சுதான் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.












Click it and Unblock the Notifications