சிக்ஸர்! ஊரு ரெண்டு பட்டா.. ஓபிஎஸ் - இபிஎஸ் பஞ்சாயத்தால் உற்சாக திமுக! தலையில் அடிக்கும் ர.ர.க்கள்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் அதிகார மோதலால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ அதிமுக தொண்டர்கள் தான், ஏனென்றால் அந்த அளவுக்கு சொந்த கட்சி தலைவர்கள் மீதேகடும் அதிருப்தியில் உள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பல்வேறு கட்ட பரபரப்புகளையும் திருப்பங்களையும் சந்தித்து வரும் நிலையில் ஒரு முடிவுக்கு வாங்க என அதிமுக தொண்டர்களே கேட்கும் அளவுக்கு தான் தற்போதைய நிலை உள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புகள் எடுக்கும் முடிவுகள் செல்லாது, பொதுக்குழு கூட்டத்தை கூட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மிக நீண்ட புகார் பட்டியல் அனுப்பி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்குமா என எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சியில் உள்ளது.
பொன்னான வாய்ப்பு போச்சே! எடப்பாடி கேம்ப் செய்த 6 தவறுகள்! கெட்டியாக பிடித்த ஓபிஎஸ்! யாருக்கு சாதகம்?
அதிமுக ஒற்றை தலைமை
இந்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் மற்ற கட்சிகளை விட அதிமுக தொண்டர்களை இரு தலைவர்கள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர் ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி பன்னீர்செல்வம் இரு தரப்பினருக்குமே ஆதரவாளர்கள் உள்ளதால் நீண்ட காலம் ஒன்றாக பயணித்தவர்கள் தற்போது தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே மாவட்டத்தில் இரு தலைவர்களையும் ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது கட்சி இரண்டாகப் பிளவுபட்டு இருப்பதை காட்டுகிறது.
தொண்டர்கள் கலக்கம்
குறிப்பாக ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் உண்மையான அதிமுக கட்சி தொண்டர்கள் சற்றே மன வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில்தான் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் உற்சாகத்தில் இருக்கின்றனர் திமுகவினர் காரணம் தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து கையெழுத்திட்டால் தான் அவர்களுக்கு சின்னம் ஒதுக்க முடியும்.
உள்ளாட்சி இடைத் தேர்தல்
இதனால் பல மாவட்டங்களில் அதிமுகவினர் போட்டியிடாமல் நேரடியாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர் இதனால் திமுகவினர் எளிதாக வெற்றி பெறும் நிலை உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஏழு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதில் வார்டு உறுப்பினர் தேர்தல்களில் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிடுவோர் அனைவருக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கிடப்பட உள்ளன. ஒட்டன்சத்திரம் ஒன்றியம் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுகவின் உற்சாகம்
வேட்புமனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் சண்முகம் மற்றும் சுயச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராமசாமி. அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக சார்பில் ராஜசுந்தரசெல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் இரட்டை இலை சின்னம் பெற கட்சித் தலைமையின் கடிதம் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யாருமே போட்டியிட முடியாத நிலைமை உள்ளது காரணம். எப்படியும் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் தாங்களாகவே போட்டியிடாமல் விலகி வருகின்றனர். இதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர் திமுக வேட்பாளர்கள்.