அஜித் சேப்பாக்கம் கிரவுண்ட் வந்ததை.. அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்ட திமுக ஆதரவாளர்கள்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைகட்டியிருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25, 2025) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டிக்கு ரசிகர்களை விடவும் அதிகம் கவன ஈர்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம்... அங்கு நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் வருகை தந்ததுதான்.
நடிகர் அஜித் மைதானத்திற்கு வந்த தகவல் பரவியதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகியோருடன் அவர் ஆட்டத்தை ரசித்தது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவின. ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பகிர்ந்து 'தல' வருகையை கொண்டாடினர். சாக்ஷி தோனி, ஸ்ருதி ஹாசன் போன்றோரும் மைதானத்தில் இருந்தனர் என்றாலும், அஜித் வருகைதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய அரசியல் காய்நகர்த்தல்?
ஒருபுறம் அஜித் வருகையால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், மறுபுறம் இந்த நிகழ்வை வைத்து அரசியல் ரீதியான விவாதங்களும், சண்டைகளும் வெடித்துள்ளன. குறிப்பாக, திமுக ஆதரவு சமூக வலைத்தள கணக்குகள் மூலமாக நடிகர் விஜய்யை சீண்டும் வகையில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது, "அஜித் இப்படி மக்களோடு கலந்து பழக ஆரம்பித்தால் விஜய்லாம் ஒரு பொருட்டே இல்லை" என்பது போன்ற கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. நீண்டகாலமாகவே மோதிக்கொள்ளும் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே இந்த பதிவுகள் மேலும் பகையை வளர்த்துள்ளன. திமுக ஆதரவாளர்களின் இந்த பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் கோபத்துடன் பதிலடி கொடுக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் வியூகமா?
நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், அவரின் அரசியல் வருகையை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. அந்த வகையில், திமுக ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது, அஜித் இதுபோல பொதுவெளியில் தோன்றும்போதெல்லாம், அதை பெரிதுபடுத்தி, விஜய் ரசிகர்களை சீண்டிவிட்டு, அதன்மூலம் அஜித் ரசிகர்களின் கவன ஈர்ப்பை பெற முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குட் பேட் அக்லி படத்தை பார்க்கும் முன்பாகவே பல திமுக ஆதரவாளர்கள், அந்த படத்தை போற்றி புகழ்ந்து விஜயை கேலி செய்ததும் இதன் பின்னணியில்தான் என்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவதை அடுத்து, அஜித் ரசிகர்கள் ஆதரவை ஓரளவுக்கு தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதுதான் இந்த வியூகத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே, அஜித் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு எதிரான மனநிலையை மேலும் தூண்டிவிடும் வகையில் இதுபோல பல விஷயங்கள் திமுக ஆதரவாளர்களால் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டிக்கு நடிகர் அஜித் வருகை தந்தது, வெறும் ரசிகர்களின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான கணக்குகள் மற்றும் ரசிகர் மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதே தற்போதைய நிலை. நட்சத்திரங்களின் புகழ் இப்போது அரசியல் காய்நகர்த்தல்களிலும் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications