Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க உகந்த நேரம் எது?
சென்னை: அட்சய திருதியை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் ஏப்ரல் 20 ஆம் தேதி என்கிறார்கள். ஆனால் எந்த தேதியில் இந்த வைபவம் என்பதை பார்க்கலாம். அது போல் தங்கம் வாங்கி சிறந்த நேரம் எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
நடப்பாண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறையின் மூன்றாவது நாள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யும் அனைத்து காரியங்களும் நல்ல பலனை அளிக்கும். அந்த நாளில் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படும் தங்கத்தை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்! 'அட்சயம்' என்றால் சமஸ்கிருதத்தில் 'குறையாதது' அல்லது 'அழியாதது' என்று பொருள். இந்த நாளில் செய்யப்படும் நற்செயல்களும், தொடங்கப்படும் காரியங்களும் மென்மேலும் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை.
அட்சயம் என்றால் வளர்ச்சிக்கு உதவும் என்று பொருள். அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மேஷ ராசியில் சூரியனும், ரிஷப ராசியில் சந்திரனும் இரு சிறந்த நிலைக்கு நகர்ந்து, அட்சய யோகத்தை உருவாக்குகின்றன.
இந்த நாளில் தங்கம் வாங்க சரியான நேரம் எது என்பதை பார்க்கலாம். அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி காலை 10.49 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 7.27 மணி வரை நீடிக்கிறது. இந்த மங்களகரமான நாளில் தங்கம் வாங்க விரும்புவோர் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 10.49 மணி ஏப்ரல் 20-ஆம் தேதி அதிகாலை 5.51 மணிக்குள் தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரமாகும்.
இந்த நாளில் தானம் வழங்கலாம். பூஜைகள் செய்யலாம். தங்கம், கல் உப்பு, புது துணி, அரிசி, பிற தானியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் வீட்டில் நிலையான செல்வத்தை அள்ளித் தரும்.
அட்சய திருதியையின் சிறப்புகள்
புண்ணிய தினம்: இந்நாளில் செய்யப்படும் தானம், தர்மம் மற்றும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும்.
படைப்பின் தொடக்கம்: பிரம்மா இந்த நாளில் தான் உலகைப் படைக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, இது ஒரு புதிய தொடக்கத்திற்கான நாளாகும்.
அவதார தினம்: மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்த தினம் இதுவாகும்.
அன்னபூரணி அவதாரம்: பார்வதி தேவி அன்னபூரணியாக அவதரித்து, சிவபெருமானுக்கு உணவளித்த நாளும் இதுவே.
கங்கை வருகை: பகீரதனின் தவத்தால் கங்கை நதி பூமிக்கு வந்த நாளாகவும் இது கருதப்படுகிறது.
இந்நாளில் செய்ய வேண்டியவை
பூஜை: காலையில் நீராடி, மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடுவது செல்வ வளத்தைப் பெருக்கும்.
தானம்: அரிசி, பருப்பு, பழங்கள், ஆடைகள் அல்லது குடை போன்றவற்றை ஏழைகளுக்குத் தானமாக வழங்கலாம். இது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
முதலீடு: தங்கம், வெள்ளி, நிலம் அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதற்கு இது மிகச் சிறந்த நாள்.
புதிய முயற்சிகள்: புதிய தொழில் தொடங்குவது அல்லது சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளை இந்நாளில் தொடங்கலாம்.
அட்சய திருதியை என்றாலே பலரும் தங்கம் வாங்குவதை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். ஆனால், இந்நாளில் நாம் செய்யும் 'தானம்' மற்றும் 'பிறருக்கு உதவும் பண்பு' தான் உண்மையான மற்றும் நிலையான புண்ணியத்தைத் தரும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் வாக்கு.
இந்த ஆண்டு அட்சய திருதியை உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டு வரட்டும்!















Click it and Unblock the Notifications