ஆங்கிலத்தை அகற்றி இந்தியைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால் தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9ஆம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். அமித் ஷாவின் இந்த கருத்து தென்னிந்திய மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிவிப்பில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பது தான்!

ஆங்கிலம் இணைப்பு மொழி
இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு!

தமிழகத்திற்கு விருப்பமில்லை
இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால் தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்!

22 மொழிகளும் அலுவல் மொழி
இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications