பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம்.. நாளை சென்னை வரும் ஜனாதிபதி ராஜ்பவனில் தங்குவாரா? அடுத்து என்ன?
சென்னை: தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை தர உள்ளார். இவர் நாளை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கும் நிலையில் இன்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி திரெளபதி முர்மு திட்டமிட்டப்படி நாளை ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? இல்லாவிட்டால் பாதுகாப்பு காரணங்களால் இடத்தை மாற்றம் செய்வாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. மர்மநபர் ஒருவர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார்.

இதையடுத்து அங்கு கண்காணிப்பில் இருந்த போலீசார விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே டாஸ்மாக் கடை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
அதோடு கடந்த ஆண்டு சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான அவர் ஓராண்டுக்கு பிறகு 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. தற்போது அவரிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடைய தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை தர உள்ளார். நாளை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆளுநர் மாளிகையில் தான் ஓய்வெடுக்க உள்ளார். அதன்பிறகு அவர் நாளை மறுநாள் காலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இத்தகைய சூழலின் தான் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு இன்று மாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? இல்லாவிட்டால் இன்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடம் மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தான் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். இதற்கிடையே தான் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர். மேலும் தமிழக டிஜிபி உள்பட உயரதிகாரிகள் தற்போது சம்பவ இடத்துக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சென்னை ஆளுநர் மாளிகை பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications