ஆஹா.. கேட் போட்டாச்சாமே! சூசகமாக சொன்ன தினகரன்! டிசம்பர் 5 அன்றே வெட்ட வெளிச்சமான மோதல் போக்கு!
சென்னை : சசிகலா, அமமுகவில் இணைய மாட்டார் என்பதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். டிசம்பர் 5ஆம் தேதியே இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜெயலலிதா நினைவு நாளன்று சசிகலா, அஞ்சலி செலுத்தியபோது குறைவான கூட்டமே இருந்தது. அமமுகவினர், அவருடன் நிற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், தினகரன், யாரும் சசிகலாவோடு செல்லக்கூடாது என்று கூறிவிட்டாராம்.
இந்நிலையில் தான், சசிகலாவுக்காக காலியாக வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அமமுக தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறி இருக்கிறார் தினகரன்.
புது ரெக்காட் படைத்த பாஜக.. பிரதமர் மோடி போட்டு தந்த பாதை.. வேறு எந்த கட்சியும் செய்யாத சாதனை
அமமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்க்கில் சிறைக்குச் சென்றதும், சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக சசிகலாவும், தினகரனும் வழக்குத் தொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளரான தன்னையும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனையும் நீக்க முடியாது என கோர்ட்டில் தெரிவித்தார் சசிகலா. இதற்கிடையே தனிக்கட்சியையும் தொடங்கினார் டிடிவி தினகரன்.
தலைவர் பதவி
சசிகலா சிறையில் இருந்தபோதே அமமுகவை தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே.சசிகலாவுக்காக 'தலைவர்' பதவி காலியாக வைத்திருக்கப்படும் என டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தினகரன் சூசகம்
ஆனால், சமீபத்தில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது அப்போதே பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது மீண்டும், அமமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவி அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்படும். அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் தினகரன். இதன் மூலம், சசிகலாவுக்கான கேட் அடைக்கப்பட்டு விட்டதை தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தலைவர் பதவி நிரப்பப்படும்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவி அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்படும். அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார்.
நான் வேற கட்சி
மத்திய பாஜக அரசு, எடப்பாடிக்கு அனுப்பிய கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், "ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும். நான் அமமுக பொதுச் செயலாளர், இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் தலைமையில் இணையமாட்டோம்
மேலும் பேசிய தினகரன், அதிமுகவில் உள்ளவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை, கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம். கூட்டணி யார் தலைமை என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினகரன் சமிக்ஞை
சசிகலாவுக்கு எனக் கூறப்பட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தற்போது மீண்டும் தினகரன் அதனை உறுதி செய்திருப்பதும் சசிகலா ஆதரவாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அமமுகவில் சசிகலா இனி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சமிஞைகள் தினகரன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சசிகலாவுடன் மோதல் போக்கு ஜெயலலிதா நினைவு நாளின்போதே வெளிப்பட்ட நிலையில் தினகரன் இவ்வாறு பேசியுள்ளார்.
சசிகலா - தினகரன்
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர். டிடிவி தினகரனுக்கு முன்னதாக சசிகலாவுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கூட்டம் குறைவாக இருந்ததால், தினகரனுக்குப் பின்னால் அஞ்சலி செலுத்தச் சென்றால் அவரது ஆதரவாளர்களும் தன்னுடன் இணைந்து கொள்வார்கள் என்று சசிகலா கருதினார். இதனால், பின்னால் வருவதாக கூறினார்.
சசிகலா நினைத்தது
தினகரன் தனது ஆதரவாளர்கள் மூலம் தனக்கு முன்னால் செல்லும்படி சசிகலாவுக்கு தெரியப்படுத்தியும் அவர் பிடிவாதமாக கடைசியாகத்தான் செல்வேன் என்று கூறிவிட்டார். இதனால், திறந்த வாகனத்தில் தினகரன் அஞ்சலி செலுத்த மாநில நிர்வாகிகளுடன் சென்றார். மேலும், தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது. அவரது பின்னால் செல்லக்கூடாது என்று கூறிவிட்டார். இதனால், அமமுகவினர் யாரும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.
வெட்டவெளிச்சம்
மேலும், தினகரன், ஜெயலலிதா நினைவிடத்திலேயே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால், எழிலகம் அருகே காத்திருந்தார் சசிகலா. அதோடு, அவரது ஆதரவாளர்களும் தான் செல்லும்போது வராததால், சசிகலா குறைவான கூட்டத்துடனே சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனால், சசிகலா கடுமையான முகத்துடன் காணப்பட்டார். சசிகலா வரும்போது அமமுகவினர் செல்லாததன் மூலம், தினகரன் - சசிகலா மோதல் வெட்டவெளிச்சமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதன் தொடர்ச்சியே, அமமுக தலைவர் பதவி சசிகலாவுக்கு இல்லை என தினகரன் கேட் போட்டிருப்பதும் என்கிறார்கள்.