இசக்கி சுப்பையா விலகலால்... அமமுகவின் கட்சி அலுவலகமும் பறிபோகிறது?
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வெளியேறிவரும் சூழலில் இப்போது முன்னாள் அமைச்சரும் அமமுகவின் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் அமமுகவின் கட்சி அலுவலகம் பறிபோகும் நிலை அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தேர்தல் தோல்வி, மற்றும் தினகரனின் கர்வம் போன்றவற்றை காரணங்களாக கூறுகின்றனர் மாற்றுக் கட்சிக்கு செல்வோர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைய உள்ளார்.
அவர் அதிமுகவில் இணைய உள்ளதையடுத்து அவரது சொந்த மாவட்டமான திருநெல்வேலி தென்காசியில் இணைப்பு விழா ஏற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இணைப்பு விழாவுக்காக இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான பள்ளியில் சுமார் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது.
அமமுகவுக்கு "குட்பை".. இன்று விலகுகிறார் இசக்கி சுப்பையா.. அதிமுகவில் ஐக்கியமாகிறார்
முதல்வர் - துணை முதல்வர்
இந்த இணைப்பு விழா வரும் 6 ம் தேதி மாலையில் இந்த பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. இந்த இணைப்பு விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இசக்கி சுப்பையாவோடு ஏறத்தாழ பத்தாயிரம் பேர் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகம்
தற்போது அமமுக அலுவலகம் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
இது குறித்து நம்மிடம் பேசிய இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் ஒருவர், தினகரனின் அதிகாரப் போக்கினால் அவர் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரையாக இழந்து வருவதோடு இப்போது கட்சி அலுவலகத்தையும் இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமை என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ஆனால் தினகரன் தன்னை ஜெயலலிதாவை விட மேலானவர் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அதனால் அவர் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார், கட்சிக்காரர்களிடம்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்றால் பத்திரிக்கையாளர்களிடமும் அவரும் அவரது உதவியாளரும் அப்படியே நடந்து கொள்கின்றனர் என்று தனது ஆதங்கம் முழுமையும் எடுத்துரைத்தார்
இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்?