44 இடங்களுக்கு குறி.. திட்டம் போட்டு வேலை பார்க்கும் டிடிவி.. வியூகத்திற்கு பின்னுள்ள முக்கிய காரணம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக மொத்தம் 44 இடங்களில் திமுக, அதிமுகவிற்கு டப் பைட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக தவிர்த்து அமமுக இந்த தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளதால் கண்டிப்பாக வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி அமமுக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
எப்படி
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒற்றையாளாக தமிழகம் முழுக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவரின் பிரச்சாரம் காரணமாக அமமுக சில இடங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிமுகவின் வாக்குகளை அமமுக ஓரளவிற்கு பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு
லோக்சபா தேர்தலில் அமமுகதான் மிகப்பெரிய அளவில் அதிமுகவின் வாக்குகளை பிரித்தது. அதேபோல் மீண்டும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக வாக்குகளை அமமுக பெரிய அளவில் பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 150+ இடங்களில் இந்த சட்டசபை தேர்தலில் அமமுக போட்டியிட்டாலும் கூட அமமுக குறி வைப்பது என்னவோ 44 தொகுதிகள்தான் என்கிறார்கள்.
குறி
முக்கியமான 44 இடங்களுக்குத்தான் அமமுக ஸ்கெட்ச் போட்டுள்ளதாம். கோவில்பட்டி உட்பட தென் மாவட்டங்களில் சில தொகுதிகள், வடமாவட்டங்களில் சில தொகுதிகள், டெல்டாவில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அமமுக குறி வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் அல்லது இரண்டாவது இடம் வர வேண்டும் என்பதே அமமுகவின் குறிக்கோள் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இபப்டி
150+ தொகுதிகளில் போட்டியிடும் கட்சி ஏன் 44 தொகுதிகளில் கவனம் வைக்க வேண்டும் என்றது கேட்கலாம். அமமுக எல்லா தொகுதியிலும் தேர்தல் பணிகளை செய்துதான் வருகிறது. ஆனால் இந்த 44 தொகுதிகளில் கூடுதல் கவனத்தோடு, கூடுதல் பணிகளை செய்து வருகிறது. இது அமமுக தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாக கருதும் இடங்கள்.
வாக்கு வங்கி
அதோடு இங்கு நன்றாக வேலை பார்த்தால் 7%+ வாக்குகளை மொத்தமாக பெற முடியும். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க இது அமமுக கட்சிக்கு உதவும் என்று தினகரன் நம்புகிறாராம். நான்காவது இடத்திற்கு செல்ல கூடாது.
திமுக
திமுக, அதிமுகவிற்கு அடுத்து நாம் தான் பெரிய மூன்றாவது கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அமமுக நினைக்கிறது. இந்த 44 இடங்களில் நன்றாக வேலை பார்த்தால் வாக்கு வங்கி உயரும்.. இது தனிப்பட்ட வகையில் தன்னுடைய "பவரை" உயர்த்த உதவும் என்று தினகரன் நம்புகிறாராம்.
பணிகள்
தினகரன் அதிகமாக நம்பும் நிர்வாகிகள் பலர் இந்த 44 தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தொகுதிகளின் முழு விவரம் தெரியவில்லை . தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களை அமமுக குறி வைத்துள்ளது என்று மட்டும் கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. திமுக, அதிமுகவின் வெற்றி திட்டத்தை காலி செய்யும் வகையில் அமமுக இப்படி செயல்பட்டு வருவதாக தெரிகிறது!