டெல்லி ரிட்டர்ன்.. உள்துறையா? சுகாதார துறையா? அமுதா ஐ.ஏ.எஸ்.-க்கு என்ன பதவி? பரபரக்கும் கோட்டை
சென்னை: மத்திய அரசுப் பணியிலிருந்து மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளார் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா. அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்பது இப்போது கோட்டையில் ஹாட் டாபிக்.
பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை விடுவித்து அதற்கான ஆணையை சமீபத்தில் பிறப்பித்திருந்தது மத்திய அரசு. அதனடிப்படையில், மாநில பணிக்கு திரும்பும் அமுதா, எந்த துறையில் நியமிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் எதிரொலித்தபடி இருக்கிறது.
தற்போது முதல்வருக்கு உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் என 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளராக இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், அமுதாவை தனது செயலாளர்களில் ஒருவராக நியமிக்க விரும்புகிறார்.
மத்திய அரசு பணியை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ்!
அமுதா ஐ.ஏ.எஸ்க்கு என்ன துறை?
அப்படி நியமித்தால் செயலாளர் ஒன் என்ற நிலையில்தான் அமுதாவை நியமிக்க வேண்டும். ஆனால், செயலாளர் ஒன் என்ற நிலையில் உதயச்சந்திரன் இருக்கிறார். இவர், ஸ்டாலினின் மிக நம்பிக்கைக்குரிய அதிகாரி. அதனால் செக்ரெட்டரி ஒன் பொசிஷனில் மாற்றம் இருக்கப்போவதில்லை.
4 துறைகளில் மாற்றம் இல்லை
அதனால், முதல்வரின் செயலாளராக அமுதா நியமிக்கப்படாது போனால், முக்கிய துறைகளில் ஒன்றின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படவிருக்கிறார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். தற்போதைய சூழலில் உள்துறை, தொழில் துறை, சுகாதார துறை, நிதித்துறை ஆகிய 4 துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இதுவரை மாற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து துறைகளின் செயலாளர்களும் மாற்றப்பட்டனர்.
சுகாதாரத்துறை செயலாளர்?
ஆனால் இந்த முக்கியமான 4 துறைகளிலும் மட்டும் இது வரை மாற்றம் நிகழவில்லை. இந்த 4 துறைகளில் ஒரு துறையில் அமுதா நியமிக்கப்படலாம் என்று கோட்டையில் பேச்சு நிலவுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அனேகம் மாற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறது ஒரு தகவல். ராதாகிருஷ்ணனை மாற்றம் செய்யாமல் இருந்ததை சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டி இருந்தது. தற்போது கொரோனா பரவல் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் ராதாகிருஷ்ணனை மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்துறை செயலாளர்?
அப்படி சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்படாத நிலையில் மிக முக்கியமான உள்துறையில் அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் உள்துறையில் அவர் நியமிக்கப்படக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம், பள்ளிக்கல்வி அல்லது உயர்கல்வி துறைக்கு அமுதாவை நியமித்து விடுங்கள் என்றும், முக்கிய துறைகளில் நியமிக்காதீர்கள் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒரு குரூப் வழக்கம்போல லாபிகளில் இறங்கி இருக்கிறது என்கின்றன கோட்டை தகவல்கள்.