ஜெர்மனுடன் கை கோர்த்த தமிழக அரசு! எதற்காகவென தெரியுமா? பின்னணியில் மாஸ் திட்டம்!
சென்னை: நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் இன்று பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
500 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு

ஜெர்மன் அரசு
ஜெர்மன் அரசின் சார்பில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி 2008 முதல் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி - தமிழ்நாடு (SMIF-TN) திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடன் நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி - தமிழ்நாடு திட்டம், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

500 மில்லியன் யூரோ நிதி
இத்திட்டம் ரூ.1,969.47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு நிலைகளைக் கொண்டது. இத்திட்டத்தின் முதல் நிலை டிசம்பர் 2015-லும், இரண்டாவது நிலை - பகுதி 1 டிசம்பர் 2021-லும் நிறைவடைந்தன. இத்திட்டத்தின் பகுதி - 2 டிசம்பர் 2022-ல் முடிவடையும். இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி - தமிழ்நாடு (SMIF-TN-III) திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

திட்ட ஒப்பந்தம்
அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே 24.11.2022 அன்று 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் புது தில்லியில் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் 2.12.2022 அன்று ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது.

நகர்ப்புற உள்கட்டமைப்பு
இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று பரிமாற்றம் செய்யப்பட்டது. நகர்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள் தன்மை, குறிப்பாக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் மற்றும் அதன் தொடர்புடைய இடர்களை கையாள்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி - தமிழ்நாடு திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 30.06.2030 அன்று நிறைவுபெறும்.












Click it and Unblock the Notifications