"100 வருஷம் கடன் கட்டணும்!" இனி 0.5% வட்டி உயர்ந்தாலும் பேராபத்து! எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இப்போது சொந்தமாக வீடு வைத்திருப்பதைக் கவுரவ பிரச்சனையாகக் கருதி, பலரும் கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள். ஆனால், இப்படி வீட்டுக் கடன் வாங்குவது எந்தளவுக்கு மோசமான பிரச்சினையைத் தரும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
பொருளாதார விஷயங்களை நமக்குப் புரியும்படி சொல்லும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். மிட்டில் கிளாஸ் மக்கள் எங்கே செலவுகளைக் குறைக்க வேண்டும், எப்படிச் சேமிக்கலாம் என்று பல டிப்ஸ்களை வழங்குவார்.
குறிப்பாகச் சென்னையில் 400 கிராம் தங்கம், 40 ஆயிரம் சம்பளம் வரும் வரை திருமணமே செய்து கொள்ளத் தேவையில்லை என்று கூறி 90ஸ் கிட்ஸ் வயிற்றில் புளியைக் கரைத்தவர் இவர், இப்போது சொந்தமாக வீடு வைத்திருப்பதைக் கவுரவ பிரச்சனையாகக் கருதி, பலரும் கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
ஆனால், இப்படி வீட்டுக் கடன் வாங்குவது எந்தளவுக்கு மோசமான பிரச்சினையைத் தரும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அந்த வீடியோவில், அப்போது நெறியாளர் வீட்டுக் கடன் குறித்து கேள்வி கேட்டார். அவர் கூறுகையில், "எனது அண்ணன் ஒருவர் இருக்கிறார். சொந்தமாக வீடு வைத்திருந்தால் தானே இப்போது எல்லாம் மதிப்பார்கள்.. இதனால் அவரும் ஹோம் லோன் எடுத்து வீடு ஒன்றை வாங்கினார்" என்கிறார். அப்போது இடைமறிக்கும் ஆனந்த் சீனிவாசன், "தற்போதுள்ள சூழலில் வீடு வாங்கக் கூடாது என்று பல முறை சொல்லி இருக்கிறேனே.. சரி அதை விட.. இதில் என்ன வில்லங்கம். அதை சொல்லு முதல்ல" என்கிறார்.

ஹோம் லோன்
தொடர்ந்து பேசும் நெறியாளர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஹோம் லோன் போட்டு வாங்கிவிட்டார். கடன் 300 மாதங்கள் திரும்பிக் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். இரண்டு ஆண்டுகள், அதாவது 24 மாதங்கள் ஹோம் லோன் தவணைகளை முறையாக ஒரு மாதம் கூட விடாமல் 10 லட்சம் கட்டிவிட்டார். 276 மாசம் கட்ட வேண்டி இருந்தது. கட்ட வேண்டிய 276 மாதங்கள் இப்போது திடீரென அது 350 மாதங்களாக அதிகரித்துவிட்டதாம். இது என்ன? ஏன் இப்படி நடக்கிறது? இது குறித்து விளக்கமாகச் சொல்லுங்களேன் என்று கேட்கிறார்.

காக்கா உஸ்
அதற்குப் பதிலளித்த ஆனந்த் சீனிவாசன், "இதற்காகத் தான் வீடு வாங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறினேன். அப்போதெல்லாம் என்னை ஏதோ தேசத் துரோகி என்றே சொன்னார்கள். பாட்டி வடை சுட்ட கடை தெரியுமா.. அதில் பாட்டி சுடும் வடையைக் காக்கா தூக்கிக் கொண்டு போய்விடும். அப்படிதான் இந்த 24 மாதம் காக்கா உஸ்னு போய்டுச்சு. காக்கா யாரென்று தான் தெரியவில்லை. 10 லட்சம் தானே விடப்பா. சீட்டு கட்டில் உள்ளே வெளியே மூன்று சீட்டு ஆட்டம் தெரியுமா... வை ராஜா வை என்பார்கள். அதில் நாம் குறிப்பிட்ட கார்ட்டில் பணத்தைக் கட்ட வேண்டும். அதில் வரவில்லை என்றால் மொத்த பணமும் போய்விடும். அதுபோலத் தான் அவரும் விளையாடியுள்ளார். அவர் மட்டுமில்லை. பல லட்சம் பேர் இப்படித்தான் விளையாடியுள்ளனர்.

வை ராஜா வை
கார்ட்டில் வை ராஜா வை என்று வைப்பதற்குப் பதிலாக வட்டி விகிதத்தில் வை ராஜா வை என்று வைத்துள்ளார்கள். உங்கள் அண்ணன் போன்றவர்களுக்கு மார்ச் 2021 வரை 6.5% - 6.7% வட்டி விகிதத்தில் லோன் கொடுத்தார்கள். குறைந்த வட்டி என்பதால் பலரும் விழுந்து அடித்துக் கொண்டு கடன் வாங்கினார்கள். அப்போதே நான் வேண்டாம் வேண்டாம் என எச்சரித்தேன். ஆனால், கிழவன் உளறுகிறான் என்று நான் சொல்வதைக் கேட்காமல் லோன் வாங்கினார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். 6.5% வட்டியில் ஒரு கோடி ரூபாய்க் கடன் வாங்கினால் 20 ஆண்டுகளுக்கு 74 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டும்..

என்ன காரணம்
இப்போது என்ன ஆனது என்றால்.. அமெரிக்கா மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளார். 0%இல் இருந்த வட்டியை 4.5%ஆக உயர்த்துள்ளார். இதனால் நமது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸும் வட்டி விகிதத்தை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், வட்டி விகிதம் 6.5இல் இருந்து கிரேட்டிட் ரேட்டிங் பொறுத்து 8.5 முதல் 9ஆக உயர்ந்துவிட்டது. நமது நாட்டில் 1000 கோடி கடன் வாங்கும் பெருமுதலாளிக்கு ஒரு சட்டம்... ஒரு கோடி கடன் வாங்குவோருக்குத் தனிச் சட்டம் என்று தான் இருக்கிறது. அவர்களுக்குப் பெரியளவில் வட்டி விகிதம் ஏறாது.

ப்லோட்டிங் வட்டி விகிதம்
ஆனால் வீட்டுக் கடனில் 6.5%இல் இருந்த வட்டி 8.5ஆக உயர்ந்தால் 20 ஆண்டுகள் என்பது 35 ஆண்டுகளாக உயர்ந்துவிட்டது. வட்டி விகிதம் உயர்ந்ததே இதற்குக் காரணம். வங்கியில் பிக்ஸ்டு வட்டி விகிதமாக இல்லாமல் ப்லோட்டிங் வட்டி விகிதம் இருந்தால் இப்படி நடக்கும். பிக்ஸ்டு வட்டி விகிதம் என்றால் எப்போதும் ஒரே வட்டி செலுத்த வேண்டும். ப்லோட்டிங் வட்டி விகிதம் என்றால் இதுபோல ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கடன்களுக்கான வட்டியும் உயரும். வீடு வாங்கும் போது மட்டும் கலர் என்ன, இன்டீரியர் என்ன என்பதைப் பார்க்கும் மக்கள் எதில் கையெழுத்துப் போடுகிறோம் என்று பார்ப்பதில்லை.

420 மாதங்கள்
ப்லோட்டிங் வட்டி விகிதம் இருக்கிறதா... இல்லை பிக்ஸ்டு வட்டி விகிதம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. பிக்ஸ்டு வட்டி விகிதம் என்றால் எத்தனை காலம் பிக்ஸ்டாக இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை. 20 ஆண்டுகள் என்பது நமது வாழ்க்கையின் பெரும்பகுதி. அது முழுக்க கடனாளியாகவே இருக்க வேண்டும். உங்கள் சகோதரருக்கு மேலும் ஏறும். 6.5%இல் இருந்து 8.5% போனதுக்கே 240 மாத கடன் என்பது 420 மாத கடனாகிவிட்டது. 24 மாதங்கள் கட்டியும் கடன் குறையவில்லை. இன்னும் வெறும் 396 மாதங்கள் கட்டினால் போதும் என்பார்கள். எந்த வங்கியில் வாங்கினாலும் இப்போது இதுதான் நிலை.

0.5% உயர்ந்தால்
இப்போது 8.5% வட்டி என்று இருப்பதால் இந்த நிலைமை, இது 9%, அதாவது வெறும் 0.5% உயர்ந்தால் எவ்வளவு இருக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று கேட்கிறார். அதற்கு நெறியாளர் 460, 470, 480 என்று ஏற்றிக் கொண்டே செல்கிறார். ஆனால், இத்தனை மாதங்கள் கட்டினாலும் தீராதாம். இதைத் தாண்டினால் அவரே போய் சேர்ந்துவிடுவரே என்கிறார் நெறியாளர்.

1200 மாதங்கள்
அதற்கு ஆனந்த் சீனிவாசன், "அவரது பேரன் கூட வந்து கட்ட வேண்டியிருக்கும். 100 ஆண்டுகள் கட்ட வேண்டியிருக்கும். 6.5%இல் இருந்து வட்டி 9%ஆக உயர்ந்து, நாம் அதே இஎம்ஐ தொகையைக் கட்டினால் 240 மாத கடன் காலம் என்பது 1200 மாதங்களாக உயரும். அதன் பிறகு 0.25% உயர்த்தினாலும் 200, 300 ஆண்டுகள் என்று ஏறும். ஆனால், அதற்கெல்லாம் வங்கி ஒப்புக்கொள்ளாது. ரிசர்வ் வங்கி இன்னும் இரண்டு முறை வட்டி விகிதத்தை ஏற்றினால், நிலைமை மேலும் மோசமாகும். வரும் மே மற்றும் ஜூலை மாதம் 0.25% வட்டியை உயர்த்துவார்கள். அப்போது உங்கள் அண்ணன் செஞ்சுரி போட்டுவிடுவார். இதையெல்லாம் கையெழுத்துப் போட்டுத் தான் வாங்கியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications