அவங்க ஆதரவு அதிகமா? “அதுக்கும் இருக்கு ஆப்பு”.. பறக்குது லெட்டர்.. ஓ.பி.எஸ்ஸின் அடுத்த அதிரடி மூவ்!
சென்னை : அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக மாநிலம் முழுவதுமிருந்து வந்த புகார்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கடந்த ஐந்து நாட்களாக மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கு 'செக்' வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒற்றைத் தலைமை
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தது குறித்து ஓப்பனாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்புகள் எழுந்தன.

தனித்தனியாக
ஒற்றைத் தலைமை விவாதம் பொதுவெளியில் எழுந்த நிலையில், இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாற்றி மாற்றி ஒற்றைத் தலைமை பற்றி போஸ்டர் யுத்தம் நடத்தி வருவதால் கட்சிக்குள் பதற்றம் நிலவி வருகிறது. பொதுக்குழு 23ஆம் தேதி கூடவிருக்கும் நிலையில், எடப்பாடி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் மறுப்பு
ஒற்றைத் தலைமைக்கு ஓ.பி.எஸ்ஸும் ஒத்துழைக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் ஓ.பி.எஸ்ஸை சந்தித்தபோது கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓ.பி.எஸ் உடன்பட மறுத்துள்ளார். ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என தன்னிடம் வலியுறுத்துபவர்களிடம், இரட்டைத் தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறி வருகிறாராம்.

தனி தீர்மானம்
பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க மாட்டார் எனத் தெரிய வந்துள்ளதால் வேறொரு பிளானை போட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதன்படி, பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தனித் தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகளையும் சட்டச் சிக்கல் இன்றி நீக்கவும் என்ன செய்யலாம் என்றும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் திட்டங்களை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வமும், சிலபல திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

பொதுக்குழுவில்
பொதுக்குழு கூட்டத்திற்கு செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600-க்கும் மேற்பட்டோர், 2,500 சிறப்பு அழைப்பாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும்போது தனக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கருதி வேண்டுமென்றே சிறப்பு அழைப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என அஞ்சி, செயற்கையாக பெரும்பான்மை பெறுவதற்காக சிறப்பு அழைப்பாளர்களை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதால் பொதுக்குழுவிற்கு தடை பெற ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் முறையிடவிருப்பதாகவும் ஒரு தகவல் அலையடிக்கிறது.

கடிதம் எழுத திட்டம்
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் தேர்வு முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தாங்கள் உட்கட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்படுவதாக புகார் அனுப்பியுள்ளனர். மேலும் பலரிடமும், முறைகேடு புகார்கள் தொடர்பான கடிதங்களைப் பெற்று அவற்றையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

நிர்வாகிகள் தேர்வில் முறைகேடு
அதிமுகவில் உள்ள 75 மாவட்ட கழகங்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ளனர். இந்த ஆதரவைப் பயன்படுத்தியே கட்சியின் ஒற்றைத் தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்பதால் ஓ.பி.எஸ் மாவட்ட செயலாளர்கள் மீது ஆத்திரத்தில் உள்ளார். இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி 'செக்' வைக்கலாம் என ஓ.பி.எஸ் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications