பதவிக்கு வந்த ஆபத்து போய்டுச்சு.. அப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
சென்னை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனக்கு எதிரான இரண்டு வழக்குகளில் அடுத்தடுத்து சாதகமான முடிவுகள் வந்திருப்பதால் உற்சாகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தனது அமைச்சர் பதவிக்கு இப்போதைக்கு பிரச்சனை இல்லை என நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறாராம் அனிதா ராதாகிருஷ்ணன்.
அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
அனிதா ராதாகிருஷ்ணன்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2001-2006 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
அமலாக்கத்துறை
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
அமைச்சர் பதவிக்கு சிக்கல்
அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவரது அமைச்சர் பதவி விரைவில் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. பழைய வழக்கால் தனது பதவிக்கு சிக்கல் நேருமோ என அனிதா ராதாகிருஷ்ணனும் அச்சத்தில் இருந்துவந்தார்.
ரத்து செய்யக் கோரிக்கை
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது குறித்து விளக்கமளிக்க அமலாக்கப் பிரிவு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இடைக்காலத் தடை
இதை ஏற்று ஜூலை 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ஒரே வாரத்தில்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ஒருவர் தொடர்ந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் 2016-2021 ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டதால் தொடர்ந்து வழக்கை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Recommended Video
நிம்மதி பெருமூச்சு
தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கிலும் இடைக்காலத் தடை உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது. ஒரே வாரத்திற்குள் தனக்கு எதிரான இரண்டு வழக்குகளில் தனக்கு சாதகமான முடிவுகள் வந்திருப்பதால், இனி பதவிக்கு பிரச்சனை இல்லை என நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறாராம் அனிதா ராதாகிருஷ்ணன்.