உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் களைகட்டிய அண்ணா அறிவாலயம் - வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் கொத்தாக அள்ளியுள்ளது திமுக. நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் திமுகவின் கொடி பறப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்ற திமுக வெற்றியைத் தன்வசப்படுத்தியது. 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளில் முன்னிலை வகித்தது. அதிமுக. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. 489 பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி தன் வசப்படுத்தியது.
மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லட்டுகள், இனிப்பு பலகாரங்களைக் கொடுத்து உற்சாகமாக நடனமாடினர். திமுக தலைமை அலுவலகமான சென்னையில் திமுக தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஏராளமானோர் சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால் ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications