ஒரே பேட்டி.. பாஜகவை “கிளீன் போல்ட்” ஆக்கிய ஸ்டாலின்! அண்ணாமலைக்கு வந்துச்சே கோபம் -ட்விட்டரில் சவால்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டி போட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்த நிலையில், திமுக இதுவரை கூட்டணி இல்லாம தனித்து போட்டியிட்டது இல்லை என்றும், இனி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டியளித்தா. அதில், "சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுக்க இந்த யாத்திரை கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவில் தனது பழைய டிராக்கிற்கு வந்துள்ளது.

ராகுல் காந்திக்கு பாராட்டு
ராகுல் காந்தி நம்பிக்கை அளிக்க கூடிய இளம் தலைவர். தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை அவர் மதிக்கிறார். மத வேறுபாட்டை எதிர்க்கிறார். ஒரு மொழியை திணிப்பதை அவர் எதிர்க்கிறார். அவரின் இந்த கொள்கைகள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவை. பாஜகவை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார்.

பாஜக தோல்வி
அரசியலைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரசும் இருக்க வேண்டும். குஜராத்தில் பாஜவிடம் தோல்வியடைந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் பாஜவுக்கு ஆதரவு மாறுபட்டு இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தோலில் சவாரி செய்த பாஜக
தமிழ்நாடு மக்களோ பாஜகவை முதன்மை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை. 2001 தேர்தலில் திமுகவின் தோளில் சவாரி செய்த பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. தற்போது அதிமுகவின் முதுகில் சவாரி செய்து மீண்டும் 4 எம்எல்ஏக்களை பெற்று உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பலம் இதுதான். தனித்து நின்றால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை கட்டுப்படுத்தி வளர பாஜ முயற்சிக்கிறது.

அண்ணாமலை கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. 1967 லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை.

துணை பிரதமர் கனவு
தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் திரு மு.க.ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.

ஸ்டாலினிடம் சவால்
மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், பாஜக 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு. மு.க.ஸ்டாலின் கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?" என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications