ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! காயத்ரி ரகுராமுக்கு கல்தா! இவருக்கா அந்த பதவி? அதிரடி காட்டிய அண்ணாமலை!
சென்னை : பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த பாஜக வெளிநாடு -அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக தினா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போனவர் நடிகை காயத்ரி ரகுராம். நடிகையாகவும் நடன இயக்குனராகவும் தமிழ் துறையில் நன்கு அறியப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட அவர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
அண்ணாமலை எதுவும் தெரியாமல் பேசுகிறார்..தேயிலை பற்றி என்ன தெரியும்.. வனத்துறை அமைச்சர் 'நறுக்’கேள்வி
காயத்ரி ரகுராம்
அதிரடி பேச்சுகள் மூலம் விரைவில் அரசியலிலும் பிரபலமாகத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடும் சர்ச்சைக்கு ஆளான அவர் சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மறு பிரவேசம் செய்தது போல மீண்டும் தீவிர அரசியலில் காலடி வைத்தவர் சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராம் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து அமைதி காத்து வந்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டார். இதனால் மீண்டும் பாஜகவி முன்னணி தலைவராக வலம் வர தொடங்கினார்.
டெய்சி சரண் - சூர்யா சிவா
இந்நிலையில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கம்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என கூறியிருந்தார்.
உண்மையாக சேவை
நான் கட்சியை கலங்கப்படுத்தவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை விடமாட்டேன். தொடர்ந்து கட்சி பணி செய்வேன் எனவும், பிக்பாஸில் இருந்தபோது ட்ரோல் செய்தனர். அதற்கு பதிலடி கொடுத்தேன். விசிகவில் இருந்து ட்ரோல் செய்தபோதும் பதிலடி கொடுத்தேன். இப்போது பாஜகவுக்கு வந்த புதிய நிர்வாகிக்கு உடனே பதவி கொடுத்தாங்க பதிலடி கொடுத்தது தவறு என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. விசாரிக்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். நான் மக்களுக்காக உண்மையாக சேவையாற்றி வருகிறேன். இது தொடரும் என அதிரடியாகக் கூறினார்.
இசையமைப்பாளர் தினா
இந்நிலையில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த பாஜக வெளிநாடு -அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக தினா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,"வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் தலைவராக இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் மெய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.
பின்னணி?
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக இருந்தவர் தினா. சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி தொடர் மூலாம் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது. அதன் பின்னர் 2001ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இவரது மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடித்தது. பின்னர் சில படங்களுக்கு இசையமைத்த அவர், வாய்ப்புகளின்றி சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் போராட்டங்களிலும், கட்சி கூட்டங்களிலும், கலந்து கொண்ட நிலையில், தற்போது மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.