தொகுதிகளில் வலம் வர முடியாத சூழலில் அமைச்சர்கள்... சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் முற்றுகை
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் விருதுநகரில் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி மற்றும் செல்லூர் ராஜுவிடம் நேருக்கு நேராகவே சி ஏ ஏ வை அதிமுக ஏன் ஆதரித்தது என பெண் ஒருவர் நெத்தியடி கேள்வி எழுப்பினார்.
தொகுதி உலா
அமைச்சர்களை பொறுத்தவரை வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் சென்னையிலும் 2 நாட்கள் தொகுதியிலும் இருப்பார்கள். அதுவும் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் நேரத்தில் சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஓட்டம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணத்தில் காதர் முகைதீன் கல்லூரி நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். கல்லூரி வாயில் முன்பு நூற்றக்கணக்கானோர் திரண்டுள்ள தகவல் அமைச்சருக்கு சொல்லப்பட்டதும் விழா மேடையில் இருந்து பதற்றத்துடன் புறப்பட்ட அவர் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அப்போது அவரது பார்ச்சூனர் கார் கல்லூரி வாயிலில் சீறி பாய்ந்து ஓட்டம் பிடித்தது.
திகைப்பு
இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் அதிமுக ஏன் சி ஏ ஏ-வை ஆதரித்தது என இஸ்லாமிய பெண் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, இதனால் திகைத்துப்போன நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாதிப்பு எதுவும் இருக்காது, அரசை நம்பலாம் என சமரச முயற்சி மேற்கொண்டார். அமைச்சர்களிடம் அந்த பெண் துணிச்சலாக கேள்வி கேட்டதை பார்த்த அங்கிருந்த அரசு அதிகாரிகள் பலரும் இதனை பாராட்டினர்.
புகார்
தொகுதிகளில் நடக்கும் நிலவரங்களையும், இஸ்லாமியர்கள் எந்தளவிற்கு அதிமுக மீது கோபத்தில் உள்ளார்கள் என்பதையும் சில மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். அதனை கேட்ட அவர், எல்லாவற்றுக்கும் திமுக தான் காரணம் என்றும், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சி ஏ ஏ மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நம்மாளுக விளக்க வேண்டும் எனவும் முதல்வர் கூறினாராம். பாஜக செய்ய வேண்டிய சி ஏ ஏ விளக்கம் பொதுக்கூட்டத்தை அதிமுகவே தமிழகம் முழுவதும் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.