"வெள்ளை கொடி" தம்பிதுரை?.. அவசரமாக பிரதமரை சந்திக்க காரணம் அது தானா? மொத்தம் 10 நிமிஷம்.. பரபர யூகம்
தம்பிதுரை, பிரதமர் மோடியை சந்தித்து பேசியது ஏன் என்று சில யூகங்கள் வட்டமடிக்கின்றன
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான, அதிமுகவின் மூத்த தலைவரும், எம்பியுமான தம்பிதுரை, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியுள்ளார்.. இந்த சந்திப்பு குறித்து சில யூகங்கள் கசிந்து வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் அறிவிப்பு திடீரென வெளியாகிவிடவும், பேசாமல் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கி விடலாம் என்று பாஜக மேலிடம் எடப்பாடியிடம் சொன்னதாம்..
இரட்டை இலை கிடைக்காவிட்டால், பாஜகவின் தாமரை சின்னத்தில் யுவராஜா போட்டியிடட்டும் என்றும் பாஜக தரப்பு சொல்லியுள்ளது.. ஆனால், இதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம்.
டெல்லியில் அண்ணாமலை மீட்டிங்.. இங்கே ஒரே பதற்றம்.. டாப் தலைகளை வர சொன்ன எடப்பாடி! அதிரும் நெடுஞ்சாலை
தம்பிதுரை
எனவே எடப்பாடியை சமாதானம் செய்ய மூத்த தலைவர் சிடி ரவியும், 3 முறை போனில் பேசியும் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காத நிலையில், அதிமுக போட்டியிடும் என்று வாசனை வைத்தே தெரியப்படுத்தவும் செய்திருந்தார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மேலிடம், இரட்டை இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் கேட்டதாகவும், ஆனால், அதையும் எடப்பாடி ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். அப்போது தான் உட்கட்சி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.
மு தம்பிதுரை
இதனால், ஓபிஎஸ், + எடப்பாடி இவர்களில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற குழப்பத்துக்கு தமிழக பாஜக ஆளாக நேர்ந்தது.. 4 நாட்களுக்கும் மேலாக, ஆலோசனைகளை நடத்தியும் நடத்தி வந்த சூழலில்தான், தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது.. பதாகையில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் மாற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த பதாகையில் பாஜக தலைவர்களின் போட்டோக்கள் இடம்பெறாத நிலையில், பாஜக தரப்பு மேலும் அதிர்ச்சியானது. பிறகு சிறிது நேரத்தில், "தேசிய ஜனநாயக கூட்டணி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நேம் சேஞ்ச்
பிறகு நள்ளிரவில், மூன்றாவது முறையாக, மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில், "எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பேனரில் முதலில் பெயரை மாற்றியபோதே, பாஜக அதிர்ந்து போனது.. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து விட்டதோ என்ற சந்தேகமும் கிளம்பியது.. இதை மாநில தலைவர் அண்ணாமலையிடமே செய்தியாளர்கள் கேட்டனர்..
டபுள் ஓகே
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த நடவடிக்கைக்கு தக்க நேரத்தில் பதில் கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு டெல்லி கிளம்பினார்.. மேலும், பாஜகவின் முக்கிய தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சூழலில்தான், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்தார்.. அத்துடன், பாஜகவிடம் ஆதரவு கேட்க போவதாகவும், அவர்கள் வேட்பாளரை அறிவித்தால் தங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். எனவே, ஓபிஎஸ்ஸுக்கே தன் ஆதரவை தர பாஜக முன்வரும் என்றும் யூகிக்கப்படுகிறது.
நெருங்கியாச்சு
இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை, எடப்பாடி ஆதரவாளரும், மூத்த தலைவருமான தம்பிதுரை சந்தித்து பேசியிருக்கிறார்.. சிறப்பான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக இந்த சந்திப்புக்கான காரணத்தை சொன்னாலும், விஷயம் வேறு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற சிக்கல் நீடித்து வருகிறது.. நாளைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு தேர்தல் கமிஷன் தன்னுடைய நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க உள்ளது...
சமாதான புறா
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று சொல்லி ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்... அதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பித்துரை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றொருபுறம், இந்த சந்திப்பானது, பாஜக மேலிடத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது..
ரத்தத்தின் ரத்தங்கள்
நேற்று கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு கல்தா தந்துவிட்டு, இன்று தம்பிதுரையை சமாதானம் செய்ய அனுப்பி வைத்துள்ளார்களோ என்று சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.. ஒரே நாளில் எதற்காக பேனரில் 3 முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் தெரியாமல், ரத்தத்தின் ரத்தங்கள் விழித்து வரும்நிலையில், தம்பிதுரை எதற்காக இத்தனை அவசரமாய் பிரதமரை சந்தித்து பேசினார்? 10 நிமிடம் சந்திப்பில் இவர்கள் என்ன பேசினார்கள்? என்ற குழப்பங்கள் அதிமுக தொண்டர்களை கவ்வி வருகிறதாம். நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையிலும், தம்பிதுரையின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.