தியேட்டர்களில் கொரோனா பரவல் ஈஸியாக வெடித்து கிளம்பும்.. பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் வார்னிங்
சென்னை: மூடி வைக்கப்பட்ட இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவது, கொரோனா நோய் பரவல் வெடித்து கிளம்ப மிக சரியான இடமாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பொது சுகாதாரத் துறை நிபுணரும், டாக்டருமான, பிரதீப் கவுர்.
Recommended Video
பொங்கல் பண்டிகையை ஒட்டி தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கான அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது.
மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற விஜய் மற்றும் சிம்பு நடித்த திரைப்படங்கள் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அதிக அளவுக்கு தியேட்டர்களுக்கு வருகை தர விரும்புவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதி- பொதுமக்கள் ஆதரவும் எதிர்ப்பும்
வியூகம்
திரைப்படங்கள் சரியில்லை.. ரசிக்கத் தக்கவையாக இல்லை என்பது தெரிய வந்தால் ஒரு சில நாட்கள் கழித்து படங்கள் ஓடாமல் முடங்கி விடும். எனவே, முடிந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே, அதாவது விடுமுறை நாட்களில் மக்களை தியேட்டர்களுக்கு வர வைத்து போட்ட பணத்தை திரும்ப எடுத்து விட வேண்டும் என்பது சில தயாரிப்பாளர்கள் நோக்கமாக இருக்கிறது.
நல்ல படங்கள் போதுமே
நல்ல படங்கள் எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் திரையரங்குக்கு சென்று பார்க்கத் தக்கவையாகவும், தகுதியுள்ளவையாகவும் இருக்கும். எனவே 50 விழுக்காடு ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தால், மாஸ்டர், மற்றும் ஈஸ்வரன் போன்றவை நல்ல படங்களாக இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் ஓடி சாதனை படைக்கும். நோய் பரவல் அச்சமும் பொது மக்களுக்கு இருக்காது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
மூடிவைக்கப்படும் இடம்
இந்த நிலையில்தான் பொது சுகாதாரத்துறை நிபுணரான, டாக்டர் பிரதீப் கவுர், தமிழக அரசின் இந்த உத்தரவு தொடர்பான ஒரு செய்தியை டுவிட்டரில் வெளியிட்டு அதில் தனது அறிவுரையை தெரிவித்து உள்ளார். சமூக இடைவெளி இல்லாமல் மூடி வைக்கப்பட்ட ஒரு இடத்துக்குள் மக்கள் அமர்வது என்பது, கொரோனா நோய் பரவலை வெடித்துக் கிளம்ப செய்ய ஒரு உகந்த இடமாக மாறிவிடும். எனவே பொதுமக்கள் இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வைரசுக்கு தெரியாது பாஸ்
தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், 2021 ஆம் ஆண்டு பிறந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், வைரஸ் கிருமிக்கு இந்த வருடக் கணக்கு என்பதெல்லாம் தெரியாது. நீங்கள் சுய ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்காதவரை வைரஸ் பரவக்கூடும். முக கவசம் அணிய வேண்டும், கைகள் கழுவப்பட வேண்டும், தக்க இடைவெளி விட்டு பழகவேண்டும், கூட்டம் சேரக்கூடாது, காற்று பரவ முடியாத அளவுக்கான மோசமான இடங்களில் மூடப்பட்ட இடங்களில் கூட்டமாக சேரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு யோசிக்குமா?
பல்வேறு மருத்துவ நிபுணர்களும் இதுபோன்ற கருத்தை கூறி வரும் நிலையில், தமிழக அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று 50 சதவீதம் அளவுக்கு ரசிகர்கள் திரைப்படம் பார்க்க மட்டும் அனுமதி வழங்கினால், அது மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்க முடியும் என்பது சமூக நலன் விரும்பிகள் கருத்தாக இருக்கிறது.