ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. கிளாம்பாக்கத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.. சென்னையில் கடும் டிராபிக்
சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்னையில் வசிக்கும் மக்கள் பலரும் சென்றதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல, எழும்பூர், செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெள்ளிக்கிழமையான இன்று ஆயுத பூஜை மற்றும் நாளை விஜய தசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வருவதால் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பிலும் சிறப்பு பேருந்துககள் இயக்கப்பட்டன. தசரா திருவிழா கொண்டாடப்படுவதால் குலசேகரன்பட்டினத்திற்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை உளிட்ட தென் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வருகை தந்தவர்களால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ரயில்களிலும் கடுமையான கூட்டம் காணப்பட்டது.
முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவு பயணிகள் சிரமத்துடன் பயணம் செய்தனர். ரயில் நிலையம் செல்லவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லவும் பயணிகள் அதிக அளவில் மின்சார ரயில்களிலும், மாநகர பேருந்துகளில் பயணம் செய்தனர். இதனால் பிற்பகலில் இருந்து இரவு வரை மாநகர பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அண்டை மாவட்டங்களை சேர்ந்த பலரும் சொந்த வாகனங்களில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், ஜிஎஸ்டி உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் தீபாவளி பண்டிகை கூட்டம் போல பயணிகள் கூட்டம் அலைமோதியது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இடம் கிடைக்காத பயணிகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தனர். ஆனால், வழக்கத்தை விட கட்டணம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னயில் இருந்து உடன்குடிக்கு சாதாரண இருக்கைக்கே சர்வ சாதாரணமாக 1,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஏசி வசதி கொண்ட பேருந்துகளில 2 ஆயிரத்தை தாண்டியது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல நினைத்தவர்களுக்கும் இதே நிலைதான் இருந்தது.












Click it and Unblock the Notifications