அதிமுகவில் இனிமேல் என்ன நடக்கும்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் சிக்கல்!
சென்னை: அதிமுகவை கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓ பன்னீர்செல்வத்துடன் கடும் போட்டிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி ஆகிவிட்டார். ஆனால் இனிமேல் தான் அவருக்கு பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. சசிகலாவும் ஓ பன்னீர்செல்வமும் இனி எடுத்து வைக்கப்போகும் நடவடிக்கையும் அதை எடப்பாடி சமாளிப்பதிலும் இருக்கிறது அவரது வெற்றி.
சட்டசபை தேர்தலில் தோற்று ஆட்சியை பறிகொடுத்தாலும், அதிமுக 66 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதுவும் திமுகவைவிட கொங்கு மண்டலத்தில் மிக அதிக இடங்களில் வென்றதால் அதிமுக இன்றைக்கு வலுவான எதிர்க்க்ட்சி என்ற அந்தஸ்தை பெற முடிந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்கிறார்கள் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?
முழு அதிகாரம்
அதனால் தான் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற போட்டி எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் வந்த போது எம்எல்ஏக்கள் பலரும் ஒருமித்த குரலில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். இதனால் கிட்டத்தட்ட இப்போது அதிமுகவின் முழு அதிகாரம் பெற்றவராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். கட்சிக்காக விட்டுக்கொடுத்த ஓ பன்னீர்செல்வம் இனி என்ன செய்வார் என்ற பரபரப்பு ஒரு பக்கம் நிலவுகிறது.
எடப்பாடி வசம்
சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற மீண்டும் களம் இறங்குவார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தன் வசப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது ஆனால் எந்த பிரச்சனையும் செய்யாமல், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அறிக்கைவிட்டுவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதனால் எடப்பாடியின் கை, அதிமுகவில் அப்போதே முழுமையாக ஓங்கியது
காத்திருக்கு சவால்
அடுத்தாக அமமுகவின் டிடிவி தினகரன் தனியாக போட்டியிட்ட நிலையில் படுதோல்வி அடைந்ததால், அரசியல் எதிர்காலம் குறித்து என்ன முடிவு எடுப்பது என்று யோசித்து வருகிறார். இப்போதைய நிலையில் கிட்டத்தட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரம்கட்டியதில் எடப்பாடி வெற்றியும் கண்டுவிட்டார். ஆனால் இனிமேல்தான் அவருக்கு சிக்கலே காத்திருக்கிறது.
அதிமுக நிர்வாகிகள்
இது தொடர்பாக அரசியல் நோக்கர் ஒருவர் கூறுகையில், அதிமுக கொங்கு மண்டலத்தில் மட்டுமே முழுமையாக பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வடக்கிலோ, தெற்கிலோ, டெல்டாவிலோ வெற்றி பெறவில்லை. இதனால் வடக்கு, டெல்டா, தென் மாவட்ட நிர்வாகிகள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். கட்சியில் இந்த நிர்வாகிகள் அனைவரையும் எடப்பாடி பழனிசாமி தன் பக்கம் அரவணைத்து சென்றதால்தான் அதிமுகவை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியும். ஏனெனில் எந்த நேரமும் அவர்கள் ஓபிஎஸ் பக்கம் சாயலாம் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த நடவடிக்கை
இனி ஓ பன்னீர்செல்வம் பின்னால் தோல்வியை தழுவிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்தாலோ அல்லது சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர் செல்வம் காய் நகர்த்த ஆரம்பித்தலோ அதை எடப்பாடி பழனிசாமி சமாளிப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். இதுதவிர சசிகலா தரப்பே நேரடியாக ஒருவேளை நெருக்கடி தர தொடங்கினால் அதுவும் எடப்பாடி பெரும் சவாலாக அமையும் என்றார் அவர்.