விடமாட்டோம்.. 3 நாள் களமிறங்கும் அதிமுக.. திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பெரிய மூவ்..அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 13, 14 ஆகிய 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.
அதிமுக உள்கட்சி பூசலால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும், ஓ பன்னீர் செல்வம் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்தும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலில் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்
இந்நிலையில் கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதிலும் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராக பெரிய மூவ் ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக நலத்திட்டங்கள்
எம்ஜிஆர் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதிமுகவை தோற்றுவித்து, மகத்தான பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியிலே ஜெயலலிதா மக்கள் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கிடவும், எவ்வித அச்சத்திற்கும் ஆளாகாமல் தங்கள் வாழ்க்கையை சிறப்புடன் நடத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோல், அதிமுக அரசிலும், பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்யப்பட்டது.

பொய்யான வாக்குறுதிகள்
இந்நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக அரசு தமிழகம் முழுவதும் வரலாறு காணதா வகையில் 150 சதவீதம் வரையிலான சொத்து வரியை உயர்த்தியது. மின்கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டது. மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கொலை-கொள்ளை அதிகரிப்பு
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் ஊடுருவல் போதைபொருள் புழக்கம், ரவுடிகளின் அராஜகங்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.

3 நாள் ஆர்ப்பாட்டம்
இதனால் மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பர் 9 ம் தேதி பேரூராட்சி, டிசம்பர் 13ல் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும், டிசம்பர் 14ல் ஒன்றியங்களிலும் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கழகங்களோடு இணைந்து, சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

எம்எல்ஏக்கள்-எம்பிக்கள் பங்கேற்பு
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு, மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தலைமை ஏற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications