அதிமுக கூட்டணி தொடர்ந்தால் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா? 'கொளுத்திப் போட்ட' எஸ்.வி.சேகர்!
சென்னை: அண்ணா திமுக- பாஜக கூட்டணி, தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பது தொடர்பாக பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் இன்று இரவு போட்ட எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உறுதியும் செய்திருக்கிறார். அத்துடன் பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம்; இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக அடுத்தடுத்து ஆலோசனை: அதேநேரத்தில் பாஜக தரப்போ, இன்னமும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்; பாஜக கூட்டணியில் அதிமுக தொடரக் கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கையோடு பேசுகிறது. சென்னையில் பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை மறுநாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை திரும்பிய அண்ணாமலை: இதனிடையே அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி சென்ற அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்பினார். அண்ணாமலை டெல்லி திரும்பியதும் என்ன கருத்தை தெரிவிப்பார் என்பதை அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அண்ணாமலை புறப்பட்டுச் சென்றது பெரும் ஏமாற்றமானது. முன்னதாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக படங்கள் வெளியிடப்பட்டன. அதேநேரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அண்ணாமலை சந்தித்தாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

எஸ்வி சேகர் ட்விட்டர் பதிவு: இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் தமது எக்ஸ் பக்கத்தில் புதிரான ஒரு பதிவை பதிந்துள்ளார். அப்பதிவில், " அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தால் அண்ணாமலை தலைவர் இல்லை. அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் அதிமுக கூட்டணி கிடையாது. இதுவே நிதர்சனம். என் கணிப்பு என்பதுதான் எஸ்வி சேகர் பதிவிட்டிருப்பது. நடிகர் எஸ்வி சேகரின் இந்த ஆரூடங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications